Published On: Tuesday, January 17, 2012
முஷாரப்பின் தலைக்கு 10 கோடியே 10 இலட்சம் ரூபாய்

இம்மாத இறுதியில், பாகிஸ்தானுக்கு அதன் முன்னாள் அதிபர், பர்வேஸ் முஷாரப் வரப்போவதாக அறிவித் துள்ள நிலையில், அவரது தலைக்கு, 10 கோடியே 10 இலட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ளார் பலுசிஸ்தான் தலைவர் அக்பர் புக்தி. பாகிஸ்தானில் சுயாட்சி அல்லது பிரிவினைகோரி நீண்டகாலமாக, பலுசிஸ்தான் போராட்டம் நடத்தி வருகிறது. அம்மாகாண முதல்வரும், பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை இணை அமைச்சருமான, நவாப் அக்பர் கான் புக்தி இப்போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.
கடந்த 2006இல், அப்போதைய அதிபர் முஷாரப்பின் உத்தரவின்படி, மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில், பலுசிஸ்தானின் கொலு மாவட்டத்தில், இவரும் வேறு சிலரும் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், இம்மாதம், 27 - 30ஆம் திகதிக்குள், பாகிஸ்தான் திரும்பப் போவதாக முன்னாள் அதிபர், முஷாரப் அறிவித்துள்ளார். இதுகுறித்து, புக்தியின் பேரன் ஷாஜெய்ன் புக்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "முஷாரப்பை கொலை செய்யும் நபருக்கு, 10 இலட்ச ரூபாய் ரொக்கப் பணமும், 10 கோடி ரூபாய் மதிப்புடைய பங்களாவும் பரிசாக அளிக்கப்படும். மேலும், அந்த நபருக்கு முழு பாதுகாப்பும் வழங்கப்படும்' என அறிவித்தார்.
மேலும் அவர், "எனது தாத்தா மட்டுமல்லாமல், லால் மசூதியில் இருந்த நூற்றுக்கணக்கான அப்பாவிகளையும், முஷாரப் கொன்று குவித்துள்ளார். நாடு திரும்பும்போது, அவர் அரசால் கைது செய்யப்படாவிடில், மோசமான விளைவுகள் ஏற்படும்' எனவும் எச்சரித்தார். முஷாரப் நாடு திரும்பும் பட்சத்தில, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கு தொடர்பாக, கைது செய்யப்படுவார் என, உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.