Published On: Wednesday, December 28, 2011
டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த திண்ம வடிவில் புதுவகை பக்ரியா அறிமுகம்

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தவென திண்ம வடிவிலான புதுவகை பி.ரி.ஐ. (Bacillus Thurigensis Israelensis) அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த திண்ம வடிவிலான பி.ரி.ஐ.யை குறைந்தது முப்பது நாட்களுக்கு எந்தவிதப் பாதிப்புமின்றி நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்த முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வகை பி.ரி.ஐ.யை சுகாதார அமைச்சு 15 மில்லியன் ரூபாவுக்குக் கொள்வனவு செய்து பாவிப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவென திரவ வடிவிலான பி.ரி.ஐ. ஏற்கனவே அறிமுகப்பட்டிருக்கின்றது. ஆனால் அது சுமார் ஒரு வார காலமே செயல் திறன் மிக்கதாக இருக்கும்.
ஆனால் திண்ம வடிவிலான இந்த பி.ரி.ஐ.யை குறைந்தது ஒரு மாதத்திற்கு செயற்பாட்டுத் திறனுடன் காணப்படும். இது நுளம்பு குடம்பிகளை அழிப்பதற்குப் பெரிதும் உதவும். இவ்வகை பி.ரி.ஐயை நீர் தேங்கும் இடங்களில் சிறு சிறு துண்டுகளாகவும் கூட பாவிக்க முடியும்.
இத்திண்ம பி.ரி.ஐ. மூலம் டெங்கு நோயைப் பரப்புகின்ற நுளம்புகளின் பெருக்கத்தை இலக்கு வைத்து அழிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.