Published On: Sunday, February 26, 2012
போலியோ பாதிப்பு பட்டியலில் இந்தியா நீக்கம்

போலியோ பாதிப்பு நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளது. போலியோ உச்சி மாநாடு , 2012, டெல்லியில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், இந்தியாவுக்கான உலக சுகாதார அமைப்பு பிரதிநிதி நாடிலா மெனாப்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய குலாம் நபி ஆசாத், உலக சுகாதார அமைப்பிடம் இருந்து இன்று காலை எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், போலியோ பாதிப்பு நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியோவை ஒழிக்க கடந்த ஓராண்டாக இந்தியா எடுத்த நடவடிக்கையின் பலனாக, இந்த பெருமை கிட்டியுள்ளது. இந்தியாவில் கடந்த ஓராண்டில் போலியோ பாதிப்பு எங்கும் இல்லை என்றார். நாடிலா பேசுகையில், போலியோ பாதிப்பு நாடுகள் பட்டியலில் இப்போது பாகிஸ்தான், நைஜிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகள் மட்டுமே உள்ளன.
போலியோ பாதிப்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை இந்தியா தக்கவைக்க வேண்டும் என்றால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு போலியோ பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்றார். அடுத்து பேசிய பிரதமர், போலியோ ஒழிப்பில் இந்தியா செய்துள்ள இந்த சாதனைக்கான பெருமை, 23 லட்சம் தன்னார்வலர்களைதான் சேர வேண்டும். அவர்கள்தான் கடந்த ஓராண்டாக நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று போலியோ சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு கொடுத்தனர். இந்தியாவில் இருந்து மட்டுமல்ல; இந்த பூமியில் இருந்தே போலியோவை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தி இருக்கிறது என்று பாராட்டினார்.

