Published On: Friday, February 24, 2012
ஈராக் போன்று இலங்கையையும் பழிவாங்குவதே அமெரிக்காவின் நோக்கம்

இலங்கையை பழிவாங்கவே ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் அமெரிக்கா குற்றப் பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரச கட்சிகளின் தீர்மானங்களை அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேர்தல் ஒன்றின் மூலம் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாத நிலையிலேயே மனித உரிமை போன்ற குற்றச்சாட்டுக்களை 27ஆம் திகதி மனித உரிமை அமர்வின்போது அமெரிக்கா ஜெனீவாவில் முன்வைக்கவுள்ளது. ஜனாதிபதியையும், தாய்நாட்டுக்காக போராடி உயிர்நீத்த படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதே மேற்கைத்தேய நாடுகளின் நோக்கமாகும்.
இதுபோன்ற செயற்பாடுகளுக்கு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள். இலங்கை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தும் பின்னணியில் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களில் சில தீய சக்திகள் செயற்படுகின்றன. லிபியா, சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நிலைக்கு இலங்கையையும் தள்ளுவதே அமெரிக்காவின் மற்றுமொரு நோக்கமாகும். அண்மையில் நீர்கொழும்பு சிலாபம் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பின்னணியில் சில அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு காணப்படுகின்றன.
ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சார்பான சில விடயங்களை ஏற்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட நாடகமாகும். அதனையே மீனவர்கள், எரிபொருள் விலை அதிகரிப்பு என்ற பெயரில் அரங்கேற்றினர். அதன் ஒரு அங்கமாகவே உயிர்ப்பலியை ஏற்படுத்தினர் என்றும் அவர் தெரிவித்தார்.

