Published On: Sunday, March 11, 2012
டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்
நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரீமா சென். இவருக்கும் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் சிவ் கரண் சிங்கிற்கும் காதல் மலர்ந்தது.
ஒரு வருடமாக காதலித்து வந்த இந்த ஜோடிக்கு டெல்லியில் பஞ்சாபி முறைப்படி இன்று திருமணம் நடந்தது.
இதில் இந்தி பட உலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதுபற்றி ரீமா சென் கூறும்போது, ‘இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். கடந்த ஒரு வருடத்துக்கு முன் நண்பர் மூலமாக சிவ் கரணை சந்தித்தேன். எங்களுக்குள் புரிதல் ஏற்பட்டது. வாழ்க்கை முழுவதும் இருவரும் இணைந்திருக்க முடிவு செய்தோம். இன்று திருமணம் நடக்கிறது. இதை நினைத்து எந்த பதற்றமும் இல்லை. பஞ்சாபி முறைப்படி நடக்கும் இத்திருமணத்தில் இளைஞர்களுக்கான விளையாட்டு, இரவு விருந்து நடக்கிறது. மற்றும் பல்வேறு சடங்கு, சம்பிரதாயங்களும் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு தேனிலவு செல்வது பற்றி முடிவு செய்யவில்லை. இப்போது எனக்கு இரண்டு வார ஓய்வு தேவைப்படுகிறது.
தேனிலவு செல்வது பற்றி பின்னர் முடிவு செய்வோம். பஞ்சாபி பெண்ணான நான் இன்றுமுதல் டெல்லி பெண்ணாகிறேன். கடந்த வியாழக்கிழமைதான் எங்கள் இருவருக்கும் முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் நான் நடித்த இரண்டு இந்தி படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. திருமணத்தால் நான் நடிக்கும் படங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. தொடர்ந்து நல்ல வேடங்களில் நடிப்பேன் என்றார்.