எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, December 26, 2011

சுனாமியின் வடுக்களிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை

Print Friendly and PDF


எஸ்.எல்.மன்சூர் (கல்விமானி), அட்டாளைச்சேனை 
சுனாமி எனும் பெயர் நாட்டுக்குப் புதிய பெயராக வரும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. இற்றைக்கு சரியாக 6 வருடங்களுக்கு முன்னர் இப்பெயரின் வேகம், விளைவு, தாக்கம், அழிவு, பயங்கரம் அத்தனையும் பொதிந்துள்ளமை பலருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. என்றாலும் ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த கடள்கோள் அனர்த்தம் அடிக்கடி ஏற்பட்டாலும் உயிர்ச் சேதங்கள் குறைவாகவே காணப்படும். அது பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. நமது நாட்டு மக்களுக்கு அதன் தாக்கம் புரிந்திருக்கவில்லை. ஆனால் 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் இவ்வளவு விரைவாக நமது சின்னஞ்சிறு நாடான இலங்கையைத் தாக்கும் என்பததை அவதான நிலையங்களும் சரியாக கணக்கொடுக்காததன் விளைவு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்தது மட்டுமல்லாது கோடிக்கணக்கில் பெறுமதியான சொத்துக்களையும் அல்லவா நாசம் செய்தது. அதிலிருந்து விடுபட முடியாத ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களை விட்டுப்பிரிந்த, இனபந்துங்களின் தவிப்பில் சோகம் மாறாது நினைவுறுகின்ற இன்றையநாளை நாமும் அந்த மக்களின் வாழ்வில் பங்கெடுக்க இதனை சமர்ப்பிப்போம்.

அன்று ஞாயிற்றுக்கிழமை லீவு நாள் என்பதால் வானொலியில் காலை நேரத்தில் ஒலிபரப்பாகும் செய்திகளைத் தொடர்ந்து ஏனைய தனியார் வானொலி செய்திகளையும் கேட்டுக் கொண்டிருந்த போதே நேரம் 7.20ஐத் தாண்டிக் கொண்டிருந்தது. குளிப்பதற்காக குளியலறைக்குள் நுழைந்து சவரைத் திறந்து குளித்துக் கொண்டிருந்தபோது குளியலறைக்குள் நீர் நிறைந்து முழங்காலுக்கு மேல் நீர உயர்ந்து கொண்டே வந்தது. எப்போதுமில்லாத நிலை இன்று மட்டும் ஏன் என்பதை நினைத்துக் கொண்டு குளியலறைக் கதவைத் திறந்ததுதான் தாமதம் வெளியேயிருந்து நீர் என்னை நோக்கி மோதியது. என்னசெய்வதன்று தெரியாது நடுங்கிப்போனேன் நீரைக் கிழித்துக் கொண்டு வெளியே தலையை நீட்டிப்பார்த்தேன் கட்டிடத்தை சுற்றியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் நீர் மயமாகக் காட்சியளித்தது. 

என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ளமுடியாமல் இருந்தது. நீரிலிருந்து தப்புவதற்காக மேலே நீர்த்தொட்டியை நோக்கி இருந்த ஏணியில் உடனடியாக ஏறினேன். ஏறிப்பார்த்தபோதுதான் விளங்கியது கடலே எம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதும் பக்கத்திலிருந்த காரியாலயங்கள் வீடுகள் அனைத்தும் சரிந்து கொண்டிருப்பதையும் ஊரே அழிந்து கொண்டிருப்பதாகவும், மக்கள் அல்லோலப்பட்டுக் கொண்டிருப்பதும் தெரிந்தது. அந்தக் கனப்பொழு தான் நின்று கொண்டிருந்த நீர்த் தொட்டியுடன் சேர்த்து கட்டிடமுமே சரிந்துவிழ பக்கத்திலிருந்த வேம்பு மரத்தின் கிளையொன்றை தாங்கிப் பிடித்துக் கொண்டேன். அதிலிருந்து தப்பிக்க வேறு வழிதெரியவில்லை. அப்போது வேம்பு மரத்தின் அடியும் நீரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது விழத் தொடங்கியபோது நீரினுள் பாய்ந்து முடியுமானளவு நீந்திக் கரையை அடைந்தேன். நான் நீந்தியது பிரதான பாதையிலாகும். அதன்பின்னர்தான் வீதியால் ஓடிக் கொண்டிருந்தவரிடம் விடயத்தைக் கேட்டபோதுதான் கடல் ஊருக்குள் வந்த செய்தியை அறிந்து கொள்ள முடிந்தது. 


அன்று நடந்த நிகழ்வை இன்றுகூட நினைத்துப் பார்த்தாலும் நான் இன்னமும் உயிரோடுதான் இருக்கின்றோனா? என்பது என்னால் நம்பமுடியாமலே இருக்கிறது. இவ்வாறு பொத்துவில் பிரதேசத்தில் அரச அலுவலகமொன்றில் கடமையாற்றிய ஒருவரின் சுனாமிக் கதைதான் இது. தற்போது இவர் கனடாவில் நிரந்தரமாகி அங்கேயே வசித்து வருகின்றார். அவர் அண்மையில் சொந்த நாட்டுக்கு வந்திருந்தபோது அவரால் நினைவுகூறப்பட்டவை. இவ்வாறு அன்று சுனாமி ஏற்பட்டபோது தங்களின் உயிர்களை கையில் பிடித்துக் கொண்டு ஓடியபோது மதில்களும், மரங்களும், வீடுகளும், வீட்டுப்பொருட்களும் மோதி இறந்தோர் பலர். கடல் வருகின்றது என்றுகூற வீதியில் நின்றவர்கள், கேள்விப்பட்ட நிலையில் ஓடித் தப்பிக்கும் வழிதெரியாது அல்லலுற்ற உயரமான இடத்தை நாடி ஓடிச் சென்று பின்னர் வந்து பார்க்கின்றபோது தம்முடைய விடுகள் அடையாளம் தெரியாது சுக்கு நுறாhக்கப்பட்டிருந்தமை இன்று நினைத்தாலும்  சோகம் தள்ளாடுகிறது. சுனாமியின் பாதிப்பினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட லட்சக் கணக்கானோரில் ஒருசிலரின் கதைதான் இது. இவ்வாறாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு இன்னமும் நிறைவடையாது இருப்பது என்றால் அது கிழக்கு மாகாணத்திலுள்ள குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் என்றே கூறலாம். 

நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை மக்கள் சுனாமியினால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களது வாழ்வில் இன்னமும் சரியான முன்னேற்றம் காணவில்லை என்பதற்கு சாய்ந்தமருதில் இன்றும்கூட சுனாமி அகதிகள் முகாகம்களில் வாழ்கின்றார்கள் என்றால் நம்புவீர்களா? அப்படியானால் சுனாமியால் பயனடைந்தோர் யார்? கடற்கரையை அண்டி வாழ்ந்த மக்களின் வீடுகளும், அவர்களது பொருளாதாரமும் அழிவுற்று ஆயிரக்கணக்கான மக்களின் உயிரும் அல்லவா சுனாமியால் பறிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட உயிர்கள் திரும்பாது ஆனால் மக்களின் வாழ்வில் பறிக்கப்பட்ட பொருளாதாரத்தை ஓரளவாவது நிவர்த்திக்க வருகைதந்த வெளிநாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக் கொண்டதைவிட பாதிக்கின்றபோது பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அடைந்த நன்மைகள் ஏராளம் ஏராளம். அதற்காத்தான் இப்பிரதேசங்களில் ‘தங்கச் சுனாமி’ என்று கூறுவார்கள். உண்மையில் சுனாமி ஏற்பட்டபோது நமது நாட்டுமக்கள் அனைவரினதும் உள்ளமுமே பாதிக்கப்பட்டிருந்தது. குடும்பத்தில் தாயை, தந்தையை, அக்காவை, தம்பியை, மாமாவை என பலதரப்பட்டவர்கள் இறந்து வருடங்கள் ஆறு உருண்டோடிவிட்டன. மீண்டும் ஒரு சுனாமி வந்தால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே சுனாமி எச்சரிக்கை கோபுரங்களும், மக்கள் பாதுகாப்பாக வெளியேறுகின்ற முறைகள் அதற்கான படங்கள் போன்றன கடற்கரையை அண்டிய வீதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மனிதர்களது உயிரின் பெறுமானம் இழந்துபோகக்கூடாது என்பதற்காகவே இத்தனை ஏற்பாடுகளும் எடுத்தாளப்பட்டு வருகின்றன.

(டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையில் சுனாமி ஏற்பட்டு 7 வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது)

அன்று சுனாமி இலங்கைக்கு புதியதாக இருந்தாலும் தற்போது இதற்கான விளக்கத்தை ஒரு ஐந்து வயதுப் பிள்ளையிடம் கேட்டாலும் பதிலைச் சொல்லும் அளவுக்கு நாட்டு மக்கள் மத்தியில் சுனாமியின் தாக்கம் இன்னும் மறைந்து போகவில்லை என்பதே உண்மையாகும். கடந்த 2004 டிசம்பர் 26ஆம் நாள் ஒரு ஞாயிற்றுக்கிழமை உள்ளுர் நேரப்படி காலை 6. 58க்கு இந்தோனேசியாவின் சுமாத்திராத் தீவுக்கு வடக்கே 160 கிலோ மீற்றர் தூரத்தில் கடலில் 9.0 றிச்டர் அளவில் ஏற்பட்ட புவி நடுக்கத்தினால் தோற்றுவிக்கப்பட்ட கடல் கொந்தளிப்பானது சுமார் சுமார் 40.000க்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களையும், பில்லியன் ரூபா பெறுமதிக்கதான சொத்துக்களையும் ஒருசில மணிநேரத்திற்குள் கபளீகரம் செய்து அழித்தொழித்ததை இன்றும் மறக்க முடியவில்லை. அன்று தொடக்கம் இந்தச் சுனாமியும், இயற்கை அனர்த்தங்களும் இந்த டிசம்பர் மாதங்களில் அடிக்கடி ஏற்படுதவதற்கான காரணங்கள் பல இருந்தாலும் மனிதர்களின் செயற்பாடுகளும் இதற்கு பலமான காரணங்களாகவும் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


உண்மையில் இன்றைய உலகில் மக்கள் தங்களுடைய மனம் போக போக்கில் நாகரீகம் என்ற பெயரில் அழிவுக்கான ஆரம்பத்தை தொடக்கிவிட்டிருக்கின்றார்கள். அபிவிருத்தி என்றபேரில் காடுகள் நகரங்களாக மாற்றம் பெற்றுக் கொண்டு வருகின்றன. கடற்கரை மணல் அள்ளப்பட்டு கடலும் தோண்டப்பட்டு வருகின்றது. மாடிக் கட்டிடங்கள் உயர்ந்து மரங்களும், பசுமைச்சோலைகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. இயற்கையின் சீற்றம் வேகமாக அதிகரித்துக் கொண்டே  செல்கின்றது. அதிகரித்த சனத்தொகை நிலப்பற்றாக்குறை போன்றவற்றுடன் பனிப்பிரதேசம் உருகி கடல் மட்டம் உயர்ந்து கொண்டு வருகின்றது. கடல்வாழ் உயிரினங்களின் அழிவு, கடற்பிரதேசம் அழிவுக்குட்படுத்தப்படும் நிலை போன்றனவும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்குரிய காரணிகளாகவும் கூறப்படுகின்றன. 

மேலும், சுற்றாடல் மாசுபடுத்தப்படுதல், இயற்கையான அழகையும், சீராக்கலையும் குழைக்கும் நடவடிக்கைக்கு மனிதர்கள் துணைநிற்பது போன்றனவும் பேரழிவுக்கு இட்டுச் செல்லலாம். மக்கள் நாளைய பிற்சந்ததிகளுக்காக திட்டமிட்டு எதனையும் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். அண்மையில்கூட வீசிய கடும் காற்றினால் தென்பகுதி மக்கள் பலர் இறந்தும் காணாமல் போயும் உள்ளனர். முன்கூட்டியே தெரிவிக்கின்ற பல நவீன வசதிகள் இருந்தும் முன்னறிவித்தலில் கவனம் கொள்ளாமை, முன்னறிவித்தலில் தெளிவற்ற தன்மை போன்றனவும் இவ்வாறான அழிவுகளுக்கு காரணமாக அமைகின்றன. எனவேதான் கடந்த ஆறுவருடங்களாக துன்பப்படுகின்ற மக்களின் வாழ்வில் நிரந்தரமான அபிவிருத்திகள் உருவாக்கம் பெற  வேண்டும். கடற்கோளின் பின்னர் கடற்கரை பிரதேசத்தில் கட்டிடங்கள் கட்டப்படக்கூடாது என்று 100அடி பின்னர் 60அடி என்றும் மாற்றம் பெற்றுள்ள நிலையில் இன்றும் கடற்கரைக்கு அண்மையாக பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையிலும் மாற்றங்கள் தேவை. எதிர்காலத்தில் இவ்வாறனா ஒரு சுனாமி ஏற்படுகின்றபோது மக்கள் கொண்டுள்ள விழிப்புணர்வுகளும், விரைவான அறிவித்தல்களும் பக்கபலமாய் இருந்து உதவிடும் என்பதே நமது விருப்பமாகும்.


சுனாமி எனப்படும் கடள்கோள் அனர்த்தம்
கடல் பொதுவாக அமைதியாகவும், பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாகவும் காணப்படும். ஆனால் அக்கடலோ சில வேளைகளில் ஆர்ப்பரிக்கும் அலைகளை ஏற்படுத்தி கரையை நோக்கி வந்து ஈவிரக்கமற்ற கொடூரமான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதற்கு கடந்த 2004. டிசம்பர் 26ஆம் நாள் நமது நாட்டை மிகவும் அழிவுக்குள்ளாக்கிய அந்த நாள் இலங்கையில் நடந்தேறி வருடங்கள் ஏழு முடிவடைந்துவிட்டது. இவ்வாறான சுனாமி அனர்த்தம் மிகவும் அருந்தலாக ஏற்படுமொன்றாக இருக்கலாம். எனினும் அது மிகப் பயங்கரமான அழிவுகளையும் ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்துவிடும். சுனாமியின் சிறப்பியல்புகள் காரணமாக விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்காகத்தான் சுனாமி நடைபெற்ற இடங்களில் மாத்திரமன்றி கடற்சார் பிரதேசங்களில் சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சுனாமிக்கு கால நேரம் எதுவும் கிடையாது. கடலோரப் பகுதியின் சுமார் ஒருகிலோமீற்றருக்கும் மேற்பட்ட பிரதேசங்கள் சுனாமியினால் பாதிக்கப்படலாம். 

சுனாமி எவ்வாறு ஏற்படுகிறது.
• கடலுக்கடியில் ஏற்படும் ஒரு புவியதிர்வு.
• கடலால் சூழப்பட்ட ஒரு தீவில் ஏற்படும் எரிமலைக் குமுறல்.
• வேறெதேனும் ஒரு பாரிய வெடிப்பொலி (அணுகுண்டுப் பரிசோதனை போன்ற…)
• விண்ணைக் கடந்து செல்லும் உற்கை எனப்படும் எரி நட்சத்திரமொன்றிறு அல்து சிறிய கோளொன்று உடைந்து வீழ்வதனால் ஏற்படக்கூடிய ஒரு பதட்ட நிலை அல்லது நிலப்பிளவு.
• கடலுக்கடியில் அல்லது கடலோரப் பகுதியில் கடலை நோக்கி ஏற்படும் பாரிதொரு மண்சரிவு அல்லது பணிப்பாறைச் சரிவு.

போன்றன காரணமாக சுனாமி ஏற்படலாம். ஒவ்வொரு புவியதிர்ச்சியும் சுனாமியை ஏற்படுத்துவதில்லை. எனினும் பெரும்பாலான புவியதிர்வுகள் சுனாமியை ஏற்படுத்துகின்றன. அத்தகைய புவியதிர்வின் விசாலிப்பும், இயல்பும் சுனாமியொன்று ஏற்படக் காரணமாக அமைகின்றது.

சுனாமியைப் பற்றி நாம் முன்னர் அறிந்திருந்தவை?
இதற்கு முன்னர் எமது நாட்டில் நன்கறிந்த சுனாமியாக களனிதிஸ்ஸ மன்னனின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டு, விகாரமாகதேவியை பலிதீர்த்துக் கொள்ளக் காரணமாக அமைந்த கடள்கோள் என்று வரலாறு கூறுகின்றது. எனினும் 1883ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் நாள் ஏற்பட்டதாக அறியக்கிடக்கும் ஒரு சுனாமி அனர்த்தமாகும். அப்போது இது சம்பந்தமான அறிவு இன்மையால் அதுவும் ஒரு பாரியதாக்குதலாக அப்போது நிகழ்ந்துள்ளது. அன்று காலிதுறைமுகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த பல கப்பல்களின் சிதைவுகள் அங்கு காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


சுனாமியின் இல்புகள்
•கடல் நீர் மட்டத்தில் வேறுபாடு அவதானிக்கப்படலாம்.
•சுனாமியின் மிக முக்கிய இயல்பு யாதெனில் தரைப்பகுதியை நோக்கியதாக பெருக்கெடுத்து எழும் பயங்கரமான பேரலைக்கு முன்னர், கடலோரத்தின் பெரும் பகுதியில் கடல்நீர் வற்றி, கடல் நீர் பெருங்கடலுக்குள் சங்கமிக்கும் அபூர்வமானதொரு காடசியாகும். இதுவே சுனாமியின் மிக முக்கிய இயல்பாகும். இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வின்மை காரணமாக, அதனைக் கண்டுகளிக்க அந்தத்திசையை நோக்கி நகர்ந்து செல்லும் அனைவரும், உடனடுத்து தரையை நோக்கி வேகமாக அடிக்கும் பேரழிவை ஏற்படுத்தும் பயங்கரப் பேரலைக்கு இரையாகலாம். இதுவே கடந்த 2004 டிசம்பர் 26ஆம்நாளன்று சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டபோது இது நிகழ்ந்தது.
•கடல் அலையின் வேகம் மிகவும் உக்கிரமானதாக இருக்கும்.
•ஆபத்துக்குறித்து அறிவிப்பதற்கான சமிக்ஞைக் காலம் மிகவும் குறியதாக இருக்கும்.
•ஆழமான கடற்பரப்பிலிருந்து உருவாகும் உயரத்தில் குறைந்த சுனமாமி அலைகள், தரையை அண்மிக்கும் போது பேரலையாக விஸ்பரூபமெடுக்கலாம்.

சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் எவ்வாறு அறிவிப்புக்கான சமிக்ஞை கிடைக்கின்றது?
சுனாமி தொடர்பாக இலங்கைக்கு முன்கூட்டியே அபாய அறிவிப்புக் கிடைத்த மறுகணம், துரிதமாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் மூலம் பொலிஸ், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றின் துணையுடன் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். தற்போது கடற்கரைப் பிரதேசங்களில் சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாகவும் அபாய அறிவிப்புக்கள், ஒலிச் சமிக்ஞைகள் மேற்கொள்ளப்படும். எனினும் மிகச் சிறந்த அபாய அறிவிப்புக்கான சமிக்ஞை யாதெனில் சுனாமியின் சிறப்பியல்கள் குறித்து மிகவும் விழிப்பாக இருப்பதும், பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி இடம்பெயருமாறு சகலருக்கும் உடன் அறிவிப்பதுமாகும்.


கடலோரப் பகுதிகளிலுள்ள வீடுகள் தோறும் இருக்க வேண்டிய அவசர வழங்கல் தொகுதியில் இருக்க வேண்டியவை
•நாளாந்த உபயோகத்திற்காக மருந்துப் பொருட்கள் (குறிப்பாக நோய் நிலைமைகள் ஏற்பட்டவர்களுக்குத் தேவையான மருந்து வகைகள் காலாவதியாகி அகற்றுவதைத் தவிர்ப்பதற்கு அடிக்கடி அவற்றைப் பரீட்சித்துப் பயன்படுத்தலாம்) 
•வயது முதிர்ந்தவர்கள், வலது குறைந்தவர்களுக்குத் தேவையான பொருட்கள்
•சிறுகுழந்தைகளுக்குத் தேவையான பால்மா, மருந்துப் பொருட்கள், போர்;வைகள் முதலியன..
•பிறப்பத்தாட்சிப் பத்திரங்கள், கல்விச் சான்றிதழ்கள், காணி மற்றும் சொத்துக்களின் உறுதிப்பத்திரங்கள், ஆளடையாள அட்டைகள் முதலிய ஆவணங்கள்.
•ஆபரணங்களும், ஏனைய பெறுமதிவாய்ந்த பொருட்களும்..
•பணம்
•அத்தியவசியமான ஆடை அணிகலங்கள் போன்றன

சுனாமி ஆபத்திலிருந்து எவ்வாறு தப்பிக்கலாம்?
•அயலவர்களுடன் இணைந்து உயரமான நிலப்பகுதிகளை நோக்கி நகர்வதற்காக மக்களை அப்புறப்படுத்துவதற்காக, பல மார்க்கங்களை இனங்கண்டு  திட்டமிடவும், நீர் இனங்கண்டுள்ள முக்கிய அப்புறப்பத்துவதற்கான மார்க்கங்கள் சேதத்திற்கு உள்ளாகியிருக்கலாம் அல்லது தடைப்பட்டிருக்கலாம். அவ்வேளை மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம். (தற்போது சுனாமி ஏற்படக் கூடிய கடல்சார்ந்த பிரதேங்களில் முக்கியமான மார்க்கங்களை அடையாளப்படுத்தி மக்களை வெளியேறச் செய்வதற்காக பதாகைகள் மக்களின் பார்வைக்கு நடப்பட்டுள்ளன.)
•துரிதமாக கடலோரத்தின் தாழ் நிலப்பகுதிகளை விட்டொதுங்க எப்போதுமே தயார் நிலையில் இருக்கவும்.
•சுனாமி குறித்தும், அதன் தாக்கத்திலிருந்தும் தவிர்ப்பது குறித்தும் தமது குடும்பத்தவர்கள், அயலவர்கள் ஆகிய அனைவருக்கும் அறிவுறுத்தவும்.


எனவே, இவ்வாறு அனர்த்தங்கள் ஏற்பட்டு அல்லல்பட்டு வருகின்ற மக்களுக்கான அவசரமான முறையில் உணவு, உடை, மருந்துகளை விநியோகம் செய்தவற்கான மார்க்கங்களையும் கண்டறிந்து வழங்கள் போன்றவற்றுக்கான திட்டங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டியதும் கட்டாயமாகும். இவ்வாறு ஒழுங்கு முறையுடன் எமது அன்றாடக் கடமைகளுடன் இவ்வாறான அனர்த்தங்களும் ஏற்படலாம் என்பதையும் நினைத்து அவற்றின் அறிவினையும் சரியான முறையில் அறிந்து கொண்டால் இயற்கையின் கோரத்தாண்டவத்திலிருந்து எம்மையும், எமது உடமைகளையும் ஓரளவுக்காவது தப்பவைக்கலாம். என்பது திண்ணம்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452