Published On: Wednesday, January 11, 2012
பெப்ரவரி 3ஆம் திகதி உலகெங்கும் 'கொலவெறி' திரைப்படம்

2011-2012 இன் அதிரடி ஹிட் பாடலான 'ஒய் திஸ் கொலவெறிடி...' இடம்பெற்ற தனுஷின் '3' படம் வரும் பெப்ரவரி 3ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகிறது. பாமரன் தொடங்கி பிரதமர் வரை பாராட்டிய பாடல் இந்த கொலவெறி. அதேநேரம் விமர்சனங்களுக்கும் குறைவில்லை.
இந்நிலையில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள '3' படம் வரும் பெப்ரவரி 3ஆம் திகதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்க, தனுஷ் ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளதால், அதிக திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த நிறுவனம் பெரும் விலைக்கு இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் பிரபு, ரேஹினி, மயக்கம் என்ன படத்தில் நடித்த சுந்தர் மற்றும் சிவ கார்த்திகேயன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இதற்கிடையே, கொலைவெறிப் பாடல் சூப்பர் ஹிட்டான சந்தோஷத்தை நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர் தனுஷும் அவர் மனைவியும் இயக்குநருமான ஐஸ்வர்யாவும். ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் படத்தின் முக்கிய கலைஞர்களும் பங்கேற்றனர். கொலைவெறிப் பாடலுக்கு கிடைத்த வெற்றி, படத்துக்கும் கிடைக்க வேண்டுமே என்ற பதட்டம் தனக்கு இருப்பதாக ஐஸ்வர்யா தெரிவித்தார்.