Published On: Friday, February 24, 2012
மீண்டும் தொடங்குகிறது 'துப்பாக்கி' படப்பிடிப்பு

விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. தமிழகம், ஆந்திரா என எங்கும் பெப்சி பிரச்சினை தலைவிரித்தாடுவதால், மும்பையிலேயே முழுப் படப்பிடிப்பையும் நடத்த முடிவு செய்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்.
பெப்சி பிரச்சினை காரணமாக துப்பாக்கி படத்தை இடையில் நிறுத்திவிட்ட முருகதாஸ், ஒரு குறும்படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.
இது விஜய்க்கு கவலையளித்தது. படப்பிடிப்பு இல்லாததால் அவரும் கூப்பிட்ட விழாக்கள், சலூன் திறப்பு என அனைத்துக்கும் போய் வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் முருகதாஸ். கதைப்படி விஜய் மும்பையில் போலீஸ் அதிகாரி. எனவே மொத்தப் படத்தையும் மும்பையிலேயே முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர்.
பெப்சி தொழிலாளர் பிரச்சினையும் அங்கு வராது என்பதால் இந்த முடிவு என்கிறார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன் அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு மும்பையில் நடந்தபோது பெப்சிக்காரர்கள் பிரச்சினை செய்தது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கம், பெப்சி - தயாரிப்பாளர் தகராறு இன்னும் முடிவுக்கு வராததால் அனைத்து படப்பிடிப்புகளும் நின்றுபோய், கோடம்பாக்கமே ஸ்தம்பித்துள்ள நிலையில், விஜய் படத்தின் ஷூட்டிங்கை நடத்துவது முணுமுணுப்பைக் கிளப்பியுள்ளது.

