Published On: Tuesday, February 07, 2012
படுக்கையறையில் உயிரைக் குடித்த 'லப்டொப்'

இந்தியாவின் கொல்கத்தாவில் ஒருவரின் உயிரைக் குடித்துள்ளது லப்டொப் ஒன்று. ஆனால் தவறு அந்த இளைஞரின் மீதுதான். கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சப்தரிஷி சர்கார். 30 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் படுக்கையறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு அருகில் எரிந்த நிலையில் லப்டொப் கிடந்தது.
அறை முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் வந்து கதவைத் திறந்தபோது இந்த கோலத்தைக் கண்டு அதிர்ந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், அறைக்குள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் சர்க்கார். அறை ஜன்னல்கள், கதவு மூடப்பட்டிருந்தது. அறை முழுவதும் புகையாக காணப்பட்டது. மூச்சுத் திணறி அவர் இறந்துள்ளார்.
லப்டொப் ஒன்று வெடித்து எரிந்த நிலையில் காணப்பட்டது. அவர் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்று தெரிகிறது. சிகரெட் பிடித்தபோது அது லப்டொப்பில் விழுந்து அது தீப்பற்றி எரிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதில் எந்த சதியும் இருப்பதாக தெரியவில்லை. இத விபத்தாகவே தெரிகிறது என்றனர்.
லப்டொப்பை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். படுக்கை அறையில் வைத்து அதைப் பயன்படுத்துவதோ, அதை அப்படியே அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதோ கூடாது என்கிறார்கள். படுக்கையானது மிகவும் மென்மையாக இருப்பதால், லப்டொப்பின் கீழ்ப்பகுதி வழியாக காற்று புகுவதைத் தடுக்குமாம். சரியான காற்றோட்டம் லப்டொப்புகளுக்குத் தேவை. அது தடைபடும்போது லப்டொப் சூடாகி வெடிக்கும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே லப்டொப் வெடித்து உயிர்ப் பலி ஏற்பட்ட சம்பவங்கள் ருமேனியா மற்றும் நியூசிலாந்திலும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சார்ஜ் செய்து கொண்டே லப்டொப்பை பயன்படுத்தியதால் விபத்து நடந்தது.