Published On: Wednesday, February 29, 2012
ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவளிக்க ஈரான், கட்டார், சவூதி, தாய்லாந்து உறுதி

ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு, மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, கட்டார் ஈரான், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும் என பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். மேற்குறிப்பிட்ட நாடுகளின் தலைவர்களை ஜெனீவா நகரில் வைத்து, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை குழுவினர் சந்தித்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர், கட்டார் வெளிவிவகார அமைச்சர் கலீத் பின் முஹம்மத் அல்-அதீயா, மலேசிய வெளிநாட்டு அமைச்சர் ஹனீபா அமான், சவூதி அரேபியா அமைச்சர் பந்தர் பின் முஹம்மட் அல் அபான் மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சலேஹி ஆகியோருடனே இலங்கை குழுவினர் பேச்சு நடத்தியதாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார். இப்பேச்சுவார்த்தையில் இலங்கையில் யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள சமாதான நடவடிக்கைகள், அபிவிருத்திப் பணிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

