Published On: Wednesday, February 22, 2012
கச்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு
(இந்தியாவிலிருந்து ஹமீது)

விஜயகாந்த் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வானகரத்தில் கூடிய தேமுதிக பொதுக்குழுவில் பரபரப்பான 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் 7வது பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்கு, கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார்.

அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளர் சுந்தர்ராஜன், மாநில இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாநில அணி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மற்றும் தற்போது நடைபெற்ற தேமுதிக அமைப்பு தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 58 மாவட்ட செயலாளர்கள், 385 ஒன்றிய செயலாளர்கள், 125 நகர செயலாளர்கள், 529 பேரூராட்சி செயலாளர்கள் உள¢ளிட்ட புதிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் முத்துகுமாரை வெற்றி பெறச் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. தே.மு.தி.க., பொதுக்குழுவில் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: கைது நடவடிக்கை காட்டி பயமுறுத்தினாலும் பயப்பட மாட்டேன். சட்டசபையில் சபாநாயகர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தே.மு.தி.க.,வினர் தேர்தல் பணியை தொடங்க வேண்டும். புதிய மின்திட்டங்கள் இல்லாததால் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தானே புயலால் பாதித்தவர்களுக்கு நிவாரண பணிகள் சரவர கொடுக்கப்படவில்லை. புயலால் பாதித்தவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுவதற்கு பதில் மானியம் வழங்க வேண்டும். மக்களுக்கு இலவச கிரைண்டர், மிக்சி வழங்குவதிற்கு பதில் வேலை வழங்கப்பட வேண்டும் என கூறினார்.
தே.மு.தி.க., பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவில், மின்சார கட்டணத்தை உயர்த்தக்கூடாது. பால் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். புயலால்பாதித்த பகுதிகளுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயை உயர்த்த வேணடும்.
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும். மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றுவதை கைவிட வேண்டும். தமிழகத்தில் லோக் ஆயுக்தா போன்ற கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். கரும்பு கொள்முதல் விலையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பொதுக்குழுவில் தே.மு.தி.க.,வின் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் விஜயகாந்தும், அவைத்தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரனும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகள் கடும் சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கேமரா உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பாதுகாப்பு கெடுபிடியால் பரபரப்பு ஏற்பட்டது.