Published On: Tuesday, March 06, 2012
விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் தனியார் நெல் வியாபாரிகள்

(தென்கிழக்கு செய்தியாளர்)
கொள்வனவில் தனியார் வியாபாரிகள் நிறையைக் கூட்டி நெல்லின் விலையைக் குறைத்து கொள்வனவு செய்வதானது கஷ்டப்படும் விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் செயலாகும் என அட்டாளைச்சேனை பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பொதுவாக நெல் கொள்வனவின்போது 65 கிலோ எடை கொண்டதாகவும் பேக்குக்குப் பாரத்தையும் சேர்த்து (500 கிராம் சேர்த்து) 65 கிலோ 500 கிராம் கொள்வனவு செய்து வந்த தனியார் வியாபாரிகள் தற்போது 66 கிலோ கிராம் எடை கொண்டதாகவே கொள்வனவு செய்கின்றனர்.
குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்கின்ற அதேவேளை நிறையிலும் மேலதிகமாக நட்டத்தையே தாங்கிக் கொள்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதுசம்பந்தமாக விவசாயி ரகுமான் துருவத்துக்கு கருத்துத் தெரிவிக்கின்றபோது, 'இது இப்பிரதேசத்தில் மாத்திரமே காணப்படுகின்றது எனவும் இது சம்பந்தமாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் பொறுப்பு உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும். உடனடியாக இப்பிராந்தியத்தில் அரசு நெல்லைக் கொள்வனவு செய்யமால் இருப்பதும் ஒரு காரணமாகும். விவசாயிகள் பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை உரிய விலைக்கோ, நியாயமான நிறையிலோ விற்பனை செய்ய முடியாது தத்தளிக்கின்றனர். இது விவசாயிகளை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளிவிடும்' என தெரிவித்தார்.
எனவே, இப்பிராந்தியத்தில் இவ்வாறான தனியார் நெல் கொள்வனவாளர்களை உரியவர்கள் கவனமெடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

