Published On: Wednesday, March 07, 2012
பாகிஸ்தானை விட்டு போகும் பின்லேடன் குடும்பம்

ஒசாமா பின்லேடனின் மனைவிகள், குழந்தைகள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ஏமன், துபாய்க்கு செல்ல தயாராகி வருகின்றனர். அல்&கய்தா அமைப்பை சேர்ந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதியில் வசித்து வந்தார். இதை கண்டுபிடித்த அமெரிக்க படையினர், கடந்த ஆண்டு மே 2ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தி பின்லேடனை கொன்றனர். அவரது உடல் கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டது.
தாக்குதலின்போது அவருடன் தங்கியிருந்த 5 மனைவிகள், குழந்தைகள், பேரக் குழந்தைகளை பாகிஸ்தான் போலீசிடம் அமெரிக்க வீரர்கள் ஒப்படைத்தனர். ரகசிய இடத்தில் அவர்களை தங்க வைத்து கடந்த சில மாதங்களாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
பின்லேடன் குடும்பத்தினரிடம் விசாரணை முடிந்ததாக பாகிஸ்தான் போலீசார் தெரிவித்ததையடுத்து, ஏமன், துபாய்க்கு அவர்கள் ஓரிரு நாளில் புறப்படுவதாக பாகிஸ்தான் நாளேடு நேற்று செய்தி வெளியிட்டது. பின்லேடன் மனைவிகளில் சிலர் ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் தாயகம் திரும்புகின்றனர். பின்லேடனுடன் ரகசிய வீட்டில் 5 ஆண்டுகள் வசித்த கடைசி மனைவி துபாயை சேர்ந்தவர். எனவே, அவர் துபாய் செல்வதாக நாளேடு தெரிவித்துள்ளது.

