Published On: Thursday, March 01, 2012
பின்லேடன் இருந்த வீட்டில் பைபிள் கண்டுபிடிப்பு

பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டில், 2 பைபிள் பிரதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த அல் குவைதா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை, கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். அந்த வீட்டை பாகிஸ்தான் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு இடித்து தள்ளினர். அப்போது, வீட்டில் இருந்த 2 பைபிள் பிரதிகளை கைப்பற்றி உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பின்லேடனை சுட்டுக் கொன்ற பின்னர், அந்த வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி விட்டோம். எனினும், வீட்டை இடிக்கும் போது மறைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த 2 பைபிள் பிரதிகளை கைப்பற்றினோம். அந்த பைபிள்கள் ஆங்கில மொழியில் உள்ளன. அந்த பைபிளில் சில பக்கங்கள் மடித்து வைக்கப்பட்டிருந்தன. மேலும், பைபிளில் பல வாசகங்கள் அடிகோடிட்டு இருந்தன என்றனர். பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ அதிகாரிகள் கூறுகையில், அடுத்த தாக்குதலின் போது அதற்கு நியாயம் சொல்ல பைபிளின் சில பகுதிகளை குறிப்பிட்டு வைத்துள்ளதாக தெரிகிறது.
அந்த வாசகங்களை வைத்து, அல் குவைதாவின் திட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இடிக்கப்பட்ட வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 ரேடியாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றனர். பின்லேடன் தங்கியிருந்த வீடு இடிக்கப்பட்டதால், அந்த இடத்தில் மருத்துவமனை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மதவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த இடத்தில் மசூதி அல்லது மதரசா பள்ளிகள் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.