Published On: Thursday, March 01, 2012
முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.களை பதவி விலக்குவதற்கு ஐ.தே.க.வுக்கு தடை

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேரையும் விலக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று ஐ.தே.க.வுக்கு தடை உத்தரவு விதித்தது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அடங்கலான, 7 எம்.பி.கள் தாக்கல் செய்திருந்த மனுவை ஆராய்ந்த கொழும்பு மாவட்ட நீதவான் தம்மிக கனேபொல இந்த தடை உத்தரவை வழங்கினார்.
18ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களித்தது குறித்து ஐ.தே.க. செயலாளர், மு.கா. எம்.பி.களிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த ஐ.தே.க.வுக்கு அதிகாரம் கிடையாது என்று குறிப்பிட்ட மனுதாரர்கள் அந்த அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸுக்கே உள்ளதாக தெரிவித்திருந்தனர்.
பொதுத் தேர்தலில் போட்டியிட மட்டுமே ஐ.தே.க.வுடன் இணைந்ததாகவும் அவர்கள் கூறியிருந்தனர். இதன்படி முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களை பாராளுமன்றத்தில் இருந்து விலக்க தடை உத்தரவு வழங்கிய நீதிமன்றம் மேலதிக விசாரணை மே 11 ஆம் திகதி நடத்துவதாக அறிவித்தது.