Published On: Saturday, March 10, 2012
தொலைத் தொடர்பை பாதிக்கம் காந்த புயல்

சூரிய காந்த புயல் தாக்குதல் தொடரும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த காந்த புயல் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சூரியனில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால் காந்த புயல்கள் உருவாகின்றன. சூரியனின் மேற்பகுதியில் கொந்தளிப்பாக காணப்படும் பகுதி, சில நேரங்களில் அதிக வெப்பத்தால் அதில் இருந்து பிய்த்துக் கொண்டு காந்த புயலாக வெளியேறும். இது பல லட்சம் மைல் வேகத்தில் பூமியை நோக்கி பாயும்.
இதனால் செயற்கைக் கோள், மின்சாரம், விமானப் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுபோல் அவ்வப்போது நடந்தாலும் இதுவரை பூமிக்கு எந்த ஆபத்தும் நிகழவில்லை. இந்நிலையில் மிகப்பெரிய சூரிய புயல் ஒன்று நேற்று முன்தினம் பூமியை தாக்கியது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரியது. வழக்கமான சூரிய புயலில் இருந்து இது 10 மடங்கு பெரியது என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர்.
புயல் தாக்கும் போது, செயற்கை கோள், ஜிபிஎஸ், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படலாம் என்று எச்சரித்திருந்தனர். ஆனால், நேற்று காலை தாக்கிய சூரிய காந்த புயலால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர். சூரிய புயல் தாக்குதலால், பூமியின் காந்த புலத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அவர்கள் உறுதிப்படுத்தினர். அதேநேரம், வெப்பம் பூமி நோக்கில் பாய்ந்ததால் அடுத்த சில நாட்களுக்கு சுட்டெரிக்கும் வெயில் இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், ''கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, சூரியனில் இருந்து பிரகாசமான ஒளி பிய்த்து கொண்டு பூமி நோக்கி அதிவேகமாக புறப்பட்டது. பின்னர் படிப்படியாக சோப்பு நுரையில் இருந்து உருவாகும் உருண்டை போல பெரிதானது. இதுபோன்ற சூரிய புயல் தாக்குதலால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், காந்த புயல், ரேடியோ அலை புயல், கதிர்வீச்சு புயல் என்ற 3 வகை புயல்களால் தகவல் தொழில்நுட்பங்கள் பாதிக்கப்படும். இதுபோன்ற காந்த புயல் தாக்குதல் தொடரும்'' என்றனர்.

