Published On: Friday, March 02, 2012
யுவதியை கடித்துக் குதறிய நாய்க்கு எஜமான் தூக்குத் தண்டனை

பாதையில் சென்ற இளம் யுவதியைக் கடித்துக் குதறிய தனது வளர்ப்பு நாயை அதன் எஜமானர் கழுத்தில் சுருக்கிட்டு மரத்தில் தொங்க வைத்துக் கொன்றுள்ளார். இச்சம்பவம், பதுளைப் பகுதியின் வியலுவை என்ற இடத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
வளர்ப்பு நாயொன்று பாதை வழியாகச் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணைக் கடித்துக் குதறியது. இதனையடுத்து அப்பெண் நாயின் எஜமானை கடுமையான வார்த்தைப் பிரயோகங்களினால் திட்டித் தீர்த்தார். இதனை சற்றும் எதிர்பாராத நாயின் எஜமானர் கடுமையான ஆத்திரக் கொண்டு நாயைப் பிடித்து அதன் கழுத்தில் கயிரொன்றில் சுருக்கிட்டு வீட்டு முன்னாலுள்ள மரக்கிளையில் கட்டித் தொங்க வைத்தார். அந்நாய் வெகு நேரமாகக் கத்தி துடிதுடித்து பரிதாபகரமாக மரணமானது.
இதனை அவதானித்த நாயினால் கடியுண்ட இளம் பெண் அமைதியாக அவ்விடத்தை விட்டு நழுவி பதுளை அரசினர் மருத்துவமனைக்கு சென்று ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று தடுப்பூசியையும் ஏற்றிக்கொண்டு வீடு திரும்பினார். இந்நிலையில் செல்லமாக வளர்த்த நாய் இறந்ததையடுத்து அதன் எஜமானர் துயரமடைந்து கதறியழுது அந்நாயின் இறுதிக் கிரியைகளை சிறப்பாக செய்ததை காணக் கூடியதாக இருந்தது. குடும்ப உறுப்பினரொருவர் இறந்ததைப் போன்ற உணர்வுடன் அந்நாயின் எஜமானரும், குடும்பத்தவர்களும் துயரத்துடன் காணப்பட்டனர்.

