Published On: Tuesday, March 06, 2012
75 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்டார் தியேட்டர் மூடப்பட்டது

சென்னையில் பழமையான தியேட்டர்கள் மூடப்பட்டு வணிக வளாகங்களாகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறி வருகின்றன.
புவனேஸ்வரி, ராக்கி, மேகலா, வசந்தி, நடராஜ், காமதேனு, பைலட், ஆனந்த், பாரகன், ராஜ குமாரி, நாகேஷ் என 50-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன.
தற்போது பழமையான ஸ்டார் தியேட்டரும் மூடப்பட்டது. இந்த தியேட்டர் திருவல்லிக்கேணியில் 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மவுனப் படங்கள் வந்த காலத்திலேயே இந்த தியேட்டர் திறக்கப்பட்டது.
தர்மேந்திரா நடித்த ‘யாதோன் கி பாரத்’ இங்கு 400 நாட்கள் ஓடியது. இதை கேள்விப்பட்டு தர்மேந்திராவே இந்த தியேட்டருக்கு வந்து படம் பார்த்து பாராட்டினாராம்.
எம்.ஜி.ஆரின் ‘நாளை நமதே’, ‘சந்திரலேகா’, ‘பெற்றால்தான் பிள்ளையா’, ‘ரோசாப்பூ ரவிக்கைகாரி’ போன்ற படங்களும் இங்கு 100 நாட்களை தாண்டி ஓடி உள்ளன.
ஸ்ரீபிரகாசா, கே.கே.ஷா, பிரபுதாஸ் பட்வாரி உள்ளிட்ட முன்னாள் கவர்னர்கள் இங்கு படம் பார்த்து உள்ளனர். அண்ணா, ஜெமினிகணேசன், என்.வி.என்.நடராஜன், வி.என்.ஜானகி, விஜயகுமாரி, என்.எம்.ராஜம் போன்றோரும் இந்த தியேட்டரில் படம் பார்த்து உள்ளார்கள்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா குழந்தையாக இருந்தபோது தாய் சந்தியாவுடன் இந்த தியேட்டருக்கு படம் பார்க்க வந்ததாக தியேட்டரில் பணியாற்றிய பழைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

