Published On: Sunday, March 11, 2012
பலஸ்தீன் மக்களின் ரசிகன் நான் - மரடோனா
பலஸ்தீன் மக்கள் நடத்தும் போராட்டத்தை நான் மதிக்கிறேன் என்று உலகப்புகழ் பெற்ற முன்னாள் அர்ஜெண்டினா கால்பந்து விளையாட்டு வீரர் மரடோனா கூறியுள்ளார். பலஸ்தீன் மக்களின் மிகப்பெரிய ரசிகன் தான் என்று மரடோனா துபாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பலஸ்தீன் விவகாரத்தில் மரடோனா முதன் முறையாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மரடோனா கூறியதாவது, பலஸ்தீன் போராட்டத்தை மதிப்பது எனது கருத்தாகும். இக்கருத்து எவருக்கேனும் கோபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை நான் வாபஸ் பெறமுடியாது. ஃபலஸ்தீன் மக்களுக்கு அனைவரின் ஆதரவும் தேவை. அவர்களிடம் எனக்கு மதிப்பும், அனுதாபமும் உண்டு. எனது இரண்டு வயது பேரனைப் போலவே ஃபலஸ்தீன் மக்களுக்கும் எப்பொழுதும் ஆதரவு தேவை. அநீதிக்கு எதிராக பலஸ்தீன் மக்கள் நடத்தும் போராட்டம் குறித்து எனக்கு முழுமையாக தெரியும்’ என்று மரடோனா கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பலஸ்தீனைச் சார்ந்த ஒரு ரசிகரிடம் இருந்து கறுப்பு, வெள்ளை நிறத்திலான ஸ்கார்பை மரடோனா பெற்றுக்கொண்டார். அப்பொழுது அவர் வெற்றிச் சின்னத்தை உயர்த்தி காண்பித்து ‘விவா பலஸ்தீனா’ என காமெராவுக்கு முன்னிலையில் கூறினார். பலஸ்தீனுக்கு வருவதாக அந்நாட்டின் கால்பந்து குழுவிற்கு மரடோனா உறுதி அளித்துள்ளார்.