Published On: Tuesday, December 27, 2011
பட்டாசு தயாரிப்பும் கிம்புலாபிட்டிய கிராமமும்

ஒரு நேரடி ரிப்போர்ட்
(கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed)
புத்தாண்டு என்றாலே பட்டாசு வகைள் எமது ஞாபகத்திற்கு வரும். தமிழ் சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தைப் போன்று நத்தார் மற்றும் ஜனவரி புத்தாண்டு கொண்டாட்டங்;களின் போதும் பட்டாசுகளுக்கு தனியிடம் உண்டு. அந்த வகையில் நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பிரதேசம் இலங்கையில் பட்டாசு தயாரிப்புக்கு மிகவும் பிரசித்தம் பெற்றது.
இப்பிரதேசத்திலிருந்துதான் இலங்கையில் அதிகளவு பட்டாசு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கிருந்துதான் ஏனைய பிரதேசங்களுக்கு அதிக எண்ணிக்கையாக பட்டாசு வகைகள் கொண்டு செல்லப்படுகின்றன. இது தொர்பாக அறிந்து கொள்வதற்காக கிம்புலாபிட்டிய பிரதேசத்திற்கு அண்மையில் விஜயம் செய்தோம். அங்குள்ள பட்டாசு தொழிற்சாலைகள், விற்னை நிலையங்களுக்கும் சிலவற்றுக்கும் சென்றோம். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிலரையும் சந்தித்தோம்.
கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் 115 பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருப்பதாகவும், 1000 குடும்பங்கள் வரையில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், தனிப்பட்ட ரீதியில் பலர் வீடுகளிலும் சிறிய அளவில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அகில இலங்கை பட்டாசு தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஸ்டேன்லி திசாநாயக்க எம்மிடம் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்தாவது,



1910ஆம் ஆண்டில் சீனாவிலிருந்தே முதன் முதலாக பட்டாசு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது. அதன் பின்னர் 1930ஆம் ஆண்டுகளில் கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் பட்டாசு தயாரிப்பு ஆரம்பிக்கப்பட்டது. கேமிஸ் முதலாளி என்று அழைக்கப்படும் கே.இ.பெரோரா என்பவரே இப்பிரதேசத்தில் முதன் முதலாக பட்டாசு தயாரிப்பை தொழில் ரீதியில் ஆரம்பித்தார்.
முன்னர் பட்டாசு தயாரிப்பதற்கு பொற்றாசியம் குளோரைட் மூலப்பொருட்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டது. பண்டாரநாயக்காவின் ஆட்சி காலத்தில் பொற்றாசியம் குளோரைட் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆர்பாட்டமும் சத்தியாகிரகமும் நீர்கொழும்பில் இடம்பெற்றது.
1971ஆம் ஆண்டில் பொற்றாசியம் குளோரைட் முழுமையாக தடை செய்யப்பட்டு பொற்றாசியம் நைட்ரேட் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுவது ஆபத்தான தொழிலாகும். இது வரையில் இப்பிரதேசத்தில் 400 முதல் 500 பேர் வரையில் பட்டாசினால் ஏற்பட்ட விபத்துக்களில் மரணமாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.;


சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு அடுத்ததாக ஜனவரி புதுவருட பிறப்பு மற்றும் நத்தார் தினக் கொண்டாட்டங்களின் போதே அதிகளவு பட்டாசுக்கள் விற்பனையாகும். தமிழ் மக்களும் தமது உற்சவ தினங்களுக்கு அதிகளவில் பட்டாசுக்களை பயன்படுத்துவர். இதன் காரணமாக அன்று வடபகுதிக்கு அதிக எண்ணிக்கையில் பட்டாசு வகைகள் கொண்டு செல்லப்பட்டன.
பட்டாசு தயாரிப்பாளர்கள் ஏப்ரல் மாதத்துடன் தமது உற்பத்திகளை முழுமையாக நிறுத்திவிடுவார்கள். பின்னர் இரண்டு மூன்று மாதங்கள் கடந்து விஷேட சமய நிகழ்சிகள் நடத்தப்பட்ட பின்னர், மீண்டும் தமது தொழிலை ஆரம்பிப்பார்கள் என்று தெரிவித்தார். கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் நீண்ட காலமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 94 வயதுடைய எல்பர்ட் பெர்னாந்துவை அடுத்து நாம் சந்தித்தோம். அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,

அன்று வடபகுதிக்கு அதிக அளவில் பட்டாசு வகைகள் கொண்டு செல்லப்பட்டன. சிறியரக பட்டாசுகள், நிலாக் கூறு, வாண வெடிகள் அங்கு அதிகளவில் விற்பனையாகின. சாவக்கச்சேரி, யாழ்ப்பாணம், சுண்ணாகப் என்று வடபகுதியின் சகல பிரதேசங்களுக்கும் கிழக்கு பிரதேசங்களுக்கும் நான் பட்டாசு வகைகளை கொண்டு சென்று விற்பனை செய்திருக்கிறேன்
பட்டாசு தயாரிப்பு ஆபத்தாக தொழிலாகும். 1989 ஆம் ஆண்டு இப்பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் மரணமானார்கள. இதுபோன்று பல விபத்துக்களை நான் கண்டிருக்கிறேன். ஆயினும் யாரும் இத்தொழிலை விட்டுவிடுவதில்லை என்றார்.




இலங்கையில் கிம்புலாபிட்டியவுக்கு அடுத்தபடியாக ஹொரண, காலி, கண்டி போன்ற பிரதேசங்களிலும் பட்டாசு தயாரிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பட்டாசு தயாரிப்பாளரான திலங்க பிரதீப் குமார என்ற இளைஞரை அவரது தொழிற்சாலையில் சந்தித்தோம். தன்னிடம் பலர் வேலை செய்வதாகவும் இத்தொழில் ஆபத்தானதாக இருந்த போதிலும் ஓரளவு வருமானத் தரும் தொழிலாக இருப்பதாகவுத் அவர் குறிப்பிட்டார்.



உற்சவங்களின் போதும் நிகழ்வுகளின் போதும் மக்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கருவியாகவும், குறியீடாகவும் தொடர்பாடல் கருவியாகவும் உள்ள பட்டாசு தயாரிக்கப்படும் பிரசித்தமான கிம்புலாபிட்டிய கிராமத்திலிருந்து விடை பெற்றோம்.
இத்தொழிலில் உள்ள ஆபத்தும், நிகழ்ந்துள்ள கண்ணீர் சம்பவங்களும் பட்டாசு போல் இதயத்தில் வெடித்துக் கொண்டே இருந்தது.