Published On: Friday, January 13, 2012
"டேம் 999" க்கு தடை விதிக்க முடியாது -மத்திய அரசு

சென்சார் போர்டால் அனுமதி வழங்கப்பட்ட பிறகு, டேம் 999 திரைப்படத்திற்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. கங்குலி, ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தில் தற்போது பதற்றம் குறைந்து வருவதாகவும், டேம் 999 திரைப்படத்திற்கு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டும் இன்றி, திரைப்படத்தில் காட்டப்படுவது முல்லைப் பெரியாறு அணை மாதிரியே இருப்பதாகவும், 999 என்பது தமிழகம்--கேரளாவுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைக் குறிப்பது போல் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்ற மத்திய அரசின் வழக்கறிஞர் ஜெயினிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு சென்சார் போர்டு அனுமதி அளித்துவிட்ட பிறகு, திரைப்படங்களுக்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று ஜெயின் குறிப்பிட்டார்.
இதையடுத்து படத்தை திரையிட்டால் எப்படி பதற்றம் ஏற்படும் என்பது பற்றி ஜனவரி 25 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையையும் நீதிபதிகள் பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். டேம் 999 திரைப்படத்திற்கு தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி அப்படத்தின் இயக்குநர் சோகன் ராய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகின்றன.