Published On: Friday, January 13, 2012
இறந்த உடல்கள் மீது சிறுநீர் கழித்த அமெரிக்க கடற்படை

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட தலிபான் தீவிரவாதிகள் உடல் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க கடற்படை வீரர்கள் 20,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் காந்தகார், ஹெல்மாண்ட் பகுதிகளில் உள்ளனர். அவர்களில் 4 பேர் தொடர்புடைய வீடியோ இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ சீருடையில் இருக்கும் அவர்கள், ரத்த கறை படிந்த தீவிரவாதிகளின் உடல்கள் மீது சிறுநீர் கழிப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. படம் பிடிக்கப்படுவது தெரிந்தே அவர்கள் நடந்து கொள்வது போல தெரிகிறது.
சிறுநீர் கழித்து விட்டு திரும்பும் ஒருவர் ‘சிறந்த நாள் இன்று’ என்று கூறுவது பதிவாகியுள்ளது. இது இஸ்லாமிய நாடுகளில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அமெரிக்க இஸ்லாமிய உறவு கவுன்சில் (சிஏஐஆர்) அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ‘இந்த மனிதத்தன்மையற்ற செயலில் ஈடுபட்டவர்களை ராணுவ விதிமுறைகளின்படியும் அமெரிக்க சட்டப்படியும் தண்டிக்க வேண்டும்’ என்று அதில் கூறியுள்ளது.
எதிர்ப்பு அதிகரிப்பதை தொடர்ந்து, தவறு குறித்து விசாரணைக்கு பென்டகன் உத்தரவிட்டுள்ளது. அதன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ‘‘யார் இதை செய்திருந்தாலும் ஏற்கத்தக்கதல்ல. விசாரணையில் சம்பவம் உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். ஆப்கனில் உள்ள அமெரிக்க மெரைன் கார்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு நடத்தி வருகிறோம். சம்பவம் நிஜம் என்றால் ராணுவ ஒழுக்கத்துக்கு மாறானது அது. முழு விசாரணை நடத்த வேண்டியுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.