Published On: Tuesday, January 17, 2012
50 ஆண்டுகளாக ஓலைக் கொட்டிலுக்குள் ஒரு பாடசாலை

(நமது செய்தியாளர்)
இன்றைய நவீன யுகத்தில் கிராமங்கள் நகரங்களாகவும், பழைமை நவீனமாகவும், குடில்கள் மாடிகளாகவும் மாறிக் கொண்டுவரும் நிலையில் அக்கரைப்பற்று கல்வி வலயம், அட்டாளைச்சேனைக் கோட்டத்திலுள்ள தைக்காநகர் ஸஹ்றா வித்தியாலமோ மீண்டும் பழைமைக்கே மாறியுள்ளதா என எண்ணத் தோன்றுகிறது. அரசியல்வாதிகளாலும் கல்விப் பிரிவினராலும் பாராமுகமாக காணப்படுகின்ற ஒரேயொரு பாடசாலை இதுவென பாடசாலையின் அபிவிருத்தி சபையின் செயலாளரான எம்.ஐ.எம். ஜெலீல் எமது துருவத்துக்குத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்றைய கல்வித்துறை அறிவுப் புரட்சிக்கு வித்திடும் வகையில் பாடசாலைக் கட்டிடங்களும், நவீன கற்பித்தல் முறைகளுடன்கூடியதாக பல்வேறு திட்டங்கள் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் இக்கால கட்டத்தில் இப்படியொரு பாடசாலை முழுக்க முழுக்க பொது மக்களின் பங்களிப்புடன் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெறுமதியில் ஓலைக் கொட்டிலாக கட்டப்பட்டு மாணவர்கள் கல்வி கற்கின்ற ஒருகாட்சியே இதுவாகும். இப்பாடசாலையில் தரம் ஒன்றிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்கள் கற்கின்றனர்.
அண்மைக்காலமாக புதிதாக நியமிக்க்க அதிபர் ஏ.எல். அன்வர் அவர்களின் விடாமுயற்சியின் பயனாக கடந்த இரண்டாண்டுகளாக கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திவரும் இப்பாடசாலையின் அண்மைக்கால அடைவு மட்டங்கள் மிகவும் உயர்வான நிலையில் காணப்படுவதன் காரணமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தரம் ஒன்று மாணவர்கள் அனுமதி கோரியபோதிலும் கட்டிட வசதிகள் இன்மை காரணமாக இணைத்துக் கொள்ளப்படவில்லை. இணைந்து கொண்ட மாணவர்களுக்கான போதியளவு வசதிகளும் இல்லை.
அதேவேளை வலயக்கல்வி அலுவலகத்திடமும், அரசியல் வாதிகளிடமும் பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் இன்றுவரை யாரும் கவனிப்பதாக இல்லை. அதிகளவு பௌதீகவளப் பற்றாக்குறையுடன் காணப்படும் இப்பாடசாலையின் முன்னேற்றத்திற்கு யார் தடையாக இருக்கின்றார்கள் என்பதை நான் கூறமாலே புரிந்திருக்கும். அத்துடன் இப்பிரதேச மக்கள் நாளாந்த கூலிவேலை செய்வோராக காணப்படுகின்றனர். கல்வியின் சிறப்பையும், நமது பிரதேசப் பாடசாலையின் மேம்பாட்டையும் கருதி புதிய மாணவர்களுக்காகவேண்டிய கதிரைகளையும் அன்பளிப்பு செய்துள்ளனர். மேலும் அட்டாளைச்சேனை மத்திய (தேசிய பாடசாலை) கல்லூரி அதிபர் வீ.ரீ.எம்.ஹனீபா முப்பது கதிரைகளை தந்துதவினார்.
1960.01.24 அன்று ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு மாடிக்கட்டிடமாவது இல்லாமை பெரும் குறைபாடகவே உள்ளது. பிள்ளைநேயப் பாடசாலையாக இப்பாடசாலை இருந்தாலும் அதிபர், ஆசிரியர்களது விடாமுயற்சி, பெற்றோர்களது கண்காணிப்பு, மாணவர்களது மேம்பட்ட கற்றல் காரணமாக பாடசாலையின் தோற்றம் காணப்பட்டாலும் இதன் பௌதீக அபிவிருத்தியை வேண்டி நிற்கின்ற இப்பாடசாலை நிறைவேற்றுபவர் யார்? அரசா? அப்பிரதேச மக்களா? விடைதரக் கோருகின்றார் பாடசாலையின் அபிவிருத்தியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ள பாடசாலையின் அபிவிருத்தி அமைப்பின் செயலாளர் எம்.ஐ.எம். ஜெலீல். இவர் கூறும் குறைபாடுகளை நேரில் கண்ணுற்ற வகையில் அக்கரைப்பற்று கல்வி வலயம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, இப்பிரதேச அமைச்சர்கள் அதிக கரிசனை கொண்டு அபிவிருத்தி செய்கின்றபோது இன்றைய நவீன யுகத்திற்கான கல்வியை வழங்க முடியும் அல்லவா?



