Published On: Tuesday, January 31, 2012
ஆசனப்பட்டி அணியாமல் வாகனம் செலுத்துவோருக்கு அதேஇடத்தில் அபராதம்

ஆசனப்பட்டி அணியாமல் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளிடமும், முன் ஆசனத்தில் பயணம் செய்பவர்களிடமும் உடனுக்குடன் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ் மா அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது ஆசனப்பட்டி அணியாது வாகனங்களைச் செலுத்துகின்ற சாரதி களுக்கும், முன் ஆசனத்தில் பயணம் செய்கின்றவர்களுக்கும் எதிராக அதே இடத்தில் அபராதம் விதிக்கப்படாது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பொறுப்பாளர்கள் சந்திப்பின்போது பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இச்சமயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொலைபேசி ஊடாகப் பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக கேட்டறிந்தார். பொலிஸ் மா அதிபர், “ஆசனப்பட்டி அணியாது பயணிக்கின்ற சாரதி களிடமும், முன் ஆசனத்தில் பயணம் செய்கின்றவர்களிடமும் அதே இடத்தில் அபராதம் விதிப்பதற்கு தற்போதைய சட்டத்தில் இடமளிக்கப்படவில்லை. மாறாக இச்சட்ட ஏற்பாட்டின் பிரகாரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதனூடாகவே தண்டனை வழங்க முடியும்” என்றார்.
இச்சமயம் ஜனாதிபதி, “வழக்குத் தாக்கல் செய்து தீர்ப்பு வருவதற்கு சிறிது காலம் எடுக்கும். இதனால் ஆசனப்பட்டி அணியாது வாகனங்களை செலுத்துகின்ற சாரதிகளுக்கும் முன் ஆசனத்தில் பயணிப்பவர்களுக்கும் அதே இடத்தில் அபராதம் விதிக்கக் கூடியவகையில் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறும், இது விடயமாக சட்ட மா அதிபருடன் கலந்து ரையாடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.