(தேசிய நாளிதழ் ஒன்றில் 21.01.2012 அன்று வெளியான கட்டுரைக்கு பதில் கட்டுரையாக துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர் எழுதியுள்ள கட்டுரை. இது யார் மனதையும் புண்படுத்தவோ, பிரச்சினைகளை கிளரவோ எழுதப்படவில்லை. கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இக்கட்டுரையை இங்கு பிரசுரிக்கிறோம்.)
சாமஸ்ரீ தேசமாண்ய எஸ்.எல். மன்சூர் (B.Ed)
அண்மைக்காலமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏன் ஒரு முஸ்லிம் இனத்தவர் வரக்கூடாது என்கிற வாதங்கள் பேசப்பட்டுவரும் நிலையில் தங்களது அபிப்பிராயங்களை கட்சி சார்பாகவன்றி இனத்துவ அடிப்படையில் தமது சமூகத்தின் ஒற்றுமை பற்றியும், விட்டுக்கொடுப்புக்கள் பற்றியும், இந்நாட்டில் ஒரு பரந்த பிரதேசத்தில் தமிழ்பேசும் மக்கள் என்கிற அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் கடந்தகால அரசியல் நிலவரங்களை வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் அடுத்த முதலமைச்சராக ஒரு முஸ்லிம் சகோதர இனத்தவரின் தெரிவு எமது மக்களின் ஒற்றுமையையும், கடந்தகால கசப்பான சம்பவங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப்பார்க்க செய்கிறது. பழையன மறந்து, புதுயுகம் படைக்கின்ற ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் எமது கிழக்குவாழ் மக்கள் பிட்டும் தேங்காய்ப்பூவும் என்று கூறுகின்ற அந்த நாளை இதனுடாக சேர்த்துப்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?
இந்த அடிப்படையில் கடந்த 07.01.2012 சுடர்ஒளி பத்திரிகையில் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், முன்னாள் தவிசாளருமான ஜனாப் ஏ.எல். தவம் அவர்கள் கிழக்கு மாகாணத்திற்காக முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கு எவ்விதமான தடையேதும் இருக்காது என்று எண்ணத் தோன்றுகிறது” என்கிற ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். இதற்கு தவம் அவர்கள் கடந்த கிழக்கு மாகாணத் தேர்தலின் பின்னர் முஸ்லிம் முதலமைச்சராக யார் வருவது என்று மல்லுக்கட்டி நீயா...? நானா...? ஒருகை பார்ப்போம் என்கிற இனத்துவக் கருத்துக்களை அள்ளிவீசாது முஸ்லிம்களுக்கே உரித்தான விட்டுக் கொடுத்தல், மற்றவரை கனம் பண்ணுதல் போன்ற உயர் குணங்களின் அடிப்படையில் விட்டுக் கொடுத்ததைக் நாசுக்காக தெரிவித்து எதிர்காலத்தில் முஸ்லிம் ஒருவருக்கு தமிழ் சகோதரர்கள் விட்டுக் கொடுப்பதற்கு தடையே இருக்காது என்று கருத்தினை முன்வைத்திருந்தார்.
தவம் அவர்கள் கூறிய கருத்துக்களை சரியாக புரிந்துகொள்ளாத நிலையில் கடந்த 21.01.2012 சுடர்ஒளியில் கலாபூஷணம் பூ.ம. செல்லத்துரை எழுதிய கட்டுரையைப் பார்த்தவுடன் ஏன் இந்த வஞ்சகத்தனம். இன்னும் இவர்களது பார்வைகளில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்பதை நாம் சிந்திக்க வேண்டியதாய் இருந்தது. சிறியதோர் விடயத்தை பெரிதுபடுத்தி வரலாற்றை திரிபுபடுத்துகின்ற ஒரு விளக்கத்தை வழங்கியிருப்பது எதிர்காலத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிய போராட்டம், தற்போது பேச்சுவார்த்தை, 13 பிளஸ், இன்னும் எத்தனையோ எத்தனையோ.. எவற்றைப் பெற்றாலும் நாம் உங்களை ஓரங்கட்டியே தீருவோம்.

நீங்கள் அராபிய வழித்தோன்றல்கள், வியாபாரத்திற்கு வந்தவர்கள்தானே என்றெல்லாம் கூறுவதன் மர்மம்தான் என்ன? உண்மையில் இந்நாட்டுக்கு வருகை தந்த முஸ்லிம்களின் வரலாறும், அவர்கள் அக்காலத்தில் வாழ்ந்த உங்களது (கட்டுரையாசிரியர்) மூதாதையர்களுக்கு ஏற்பட்ட பல அவலங்களைத் தீர்ப்பதில் முன்னின்றார்களே! அதுமட்டுமல்ல இந்நாட்டை உலகறியச் செய்வதில் இந்த அராபியர்கள் செய்த சேவைகள் கொஞ்ச நஞ்மல்ல. என்பதை நாம் தருகின்ற ஒருசிலவற்றின் வரலாற்றை கூறலாம். இக்கருத்துக்களை சற்று சிந்தனை செய்து பாருங்கள்.
கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இலங்கையுடனான வர்த்தகம் முழுமையாக அராபியரின் கைகளிலேயே இருந்தது. 8ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் துறைமுகப் பகுதிகளில் கணிசமானவைகளில் அராபியர்கள் குடியிருந்தனர்(Thomas Arnold – Preaching of Islam) பழங்கால கிரேக்க, உரோம எழுத்தாளர்களும் இந்த வரலாற்று உண்மைகளை ஏற்றுக் கொள்கின்றனர். இதற்கு ஆதாரமாக பிலைனிங் (கி.பி.01), ஓனர்ஸ் கிரிட்டஸ் (கி.பி. 03) இன்டிகோ பிரிஸ்டிடர்ஸ் (கி.பி. 06) ஆகியோர் தங்களது கிறிஸ்தவ விவரண நூல்களிலும் தெரிவித்திருக்கின்றனர்.
அதுமட்டுமா? கி.பி. 140இல் கிளாடியஸ் தொலமியின் தொண்மையான உலகப்படத்தில் இலங்கைக்கு தப்ரபேன் என்று அடையாளமிட்டார். இன்றைய மகாவலி ஆற்றை அன்று பாஸில் பலூஸியஸ் (பாரசீக நதி) என்றும், ஜின் கங்கையை அஸனாக் பலூசியஸ் (எதியோப்பிய நதி) என்றும் தொலமி குறிப்பிட்டுள்ளமை அக்காலை நேரத்தில் இங்கு இருந்தவர்கள் அராபியர்கள் என்பதை பரைசாற்றுகின்றன. புனித இஸ்லாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதிப்பதற்கு முன்னமே இந்தியாவுக்கும் அரபுலகத்திற்கும் உள்ள தொடர்பை பேராசிரியர் ஸ்ரீ கந்தையா குறிப்பிடுகின்றார்.
2006 நவம்பர் 11, 12ஆம் திகதிகளில் ஜேர்மனியிலுள்ள ஸருட்காட் நகரில் நடைபெற்ற ஜனநாய அரசியலில் மநாட்டில் எம்.ஆர். ஸ்டார்லின் அவர்களால் ‘கிழக்கின் சுயநிர்ணயம்’ எனும் உரையில் “பத்தாம் நூற்றாண்டில் சோழரது படையெடுப்பு இலங்கை முழுவதும் இருந்த வேளையில் கிழக்கினை ராஜேந்திர சோழனுடையபடை அடிமைகொண்டபோது ஆதம்முனை என்று அழைக்கப்பட்ட தற்கால திருக்கோவிலில் இருந்த சேகு ஹசனார் பள்ளி, கரவாகு (கல்முனை) முகையதீன் பள்ளி போன்றவைகளை அழித்தொழித்தனர். இது கிழக்கின் கரையோரங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களாகும்” என்கிற கருத்தினை முன்வைத்திருந்தார். தொலமியின் இலங்கைப் படத்தில் திருக்கோவில் பகுதியிலுள்ள சின்ன முகத்துவாரம் அராபிய வியாபாரிகளால் நிறைந்து வழிந்தது எனவும் அவ்விடத்தை கர்இய்யத்துஸ்ஸஃபி எனவும் அழைத்திருக்கின்ற வரலாறுகளைப் பார்க்கலாம். மேலும் சோழரிடம் தோற்றுப்போன மகேந்திர அரசன் ஆதம்முனை அரசனான அஹமது திஸ்ஸவிடம் அடைக்கலம் கோரிய வரலாறுகளும் உண்டு.

கட்டுரையாளர் கூறுவதுபோன்று முக்குலத்தாரின் பெண்களை திருமணம் முடித்தன் மூலம்தான் கிழக்கில் முஸ்லிம்கள் உருவானார்கள் என்பது மட்டும்தான் கட்டுரையாளருக்குத் தெரிந்த விடயமாகும். இதற்கும் ஒரு நீண்டவரலாறு உண்டு. விரிவஞ்சி தவிர்க்கின்றேன். இலங்கைத் திருநாட்டில் வந்தேறு குடிகளாக எம் இரு இனத்தாரையும் கூறலாம். காலம் செய்த கோலத்தினால், நாடுகாண் பயனங்களினால், இஸ்லாத்தினை பரப்பும் ஏககொள்கையினால், வியாபாரத்தில் கொடிகட்டிப்பறந்த அரபுலகம் உலகை வெற்றிகொள்ள அவசியமற்றிருந்தது என்பதை பல ஆண்டுகள் ஆட்சி செய்த மொகலாய பாரம்பரியத்தை படித்தால் புரியும். நாடுபிடிப்பதோ, அரசாள்வதோ நோக்கமல்ல. மனிதர்கள் என்ற அடிப்படையில் இணைந்து வாழ்ந்து நல்லது புரிந்து இவ்வுலகை விட்டு பிரிந்தால் போதும் என்ற நன்நோக்கில் ஆட்சியதிகாரத்தை விட்டொதிக்கி வாழ்ந்து வருகின்ற நமது சகோதர இனத்தை ஏன் இவ்வளவு கஞ்சத் தனத்துடன் தொட்டுக் காட்டுகின்றீர்கள் என்பதுதான் புரியவில்லை.
யாழ்ப்பானத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் சகோதர இனத்தின் தீர்வுகள் இன்னும் முடிந்தபாடில்லை. கடந்த இரண்டாண்டுகளுக்குள் வெளியேற்றப்பட்ட தமிழ் சகோதரர்களுக்கான இடங்களில் வீடுகளும், ஏனைய வசதிகளும் செய்து கொடுப்பதற்கு இந்தியா உட்பட உதவுகின்றமை நாம் அறியாததா என்ன? வடக்கு கிழக்கில் நமக்குரிய அதிகாரங்களைக் கேட்டு பெறவேண்டிய கடப்பாடு காரணமாக பேரினாவாதிகளை எதிர்ப்பதில் ஈரினமும் ஓரினமாக செயற்படவில்லையா? அரசுடன் பேச்சுவார்த்தையில் முஸ்லீம்களை இணைத்துக் கொள்ள மனதளவிலாவது ஒத்துக்கொள்ளவில்லையே? புலிகளுடனான பேச்சு வார்த்தையின்போது இறுதிக்கட்டத்தில் முஸ்லிம்களை இணைத்துக் கொண்டபோதும் பெரியதாக எதையும் சாதிக்கும் வகையில் கூறப்பட்டவிடயம்தான் என்ன? தற்போதைய பேச்சின்பின்னர் தீர்வுகள் கிடைக்கின்றபோது வடக்கு கிழக்கில் சிறுபாண்மையினமான முஸ்லிம்களுக்கு எப்படி ஐயா கொடுப்பீர்கள்? மீண்டும் யுத்தம் செய்தா? உங்களுக்கு ஒருநீதி மற்றவனுக்கு ஒருநீதியா? சிந்தித்துப் பாருங்கள்!!!

நாம் கூறவருதெல்லாம் மனிதர்கள் என்கிற அடிப்படையில் சகோதரத்துடன் உறவாடி நாடுமுழுவதிலும் தமிழைத் தைரியத்துடன் கொண்டு செல்ல முஸ்லிம்கள் பாடுபட்டிருக்கின்றார்கள், பாடுபட்டு வருகின்றார்கள். சிங்கள, தமிழ் பெரும்பான்மையுடன் வாஞ்சனையற்ற விதத்தில் வாழ்ந்திருக்கின்றபோது சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பிரச்சினை வருகின்றது என்றால் யார்பக்கம் குற்றமிருந்தாலும் மூன்றாம் தரப்பொன்று அங்கு இருந்தால் அமைதியாக இருங்கள், நீதிவிசாரணை வேண்டும், அநியாங்களைக் கண்டிப்பது போன்ற விடயங்களை கூறுவது வழமையான விடயமாகும்.
இதனை பெரிதுபடுத்தி முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தமிழ் தலைவர்கள் என்றவிடயத்தை நாம் எப்போதுமே மறக்கவில்லை. ஆனால், தொட்டுக்காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. அண்மையில் யாழ்மாநகர சபையில் ஒலித்த முஸ்லீம் நாய்களே என்கிற விடயங்களைப் பற்றியெல்லாம் பேசப்படுகின்ற பெரும்பான்மையினரின் போக்கு சரியான தீர்வை அடைந்து சிறுபாண்மையினரின் உரிமைகளை பறிக்கும் விடயங்களில் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது நமது ஒற்றுமைக்கு களங்கம் விளைவிக்கும் செயலாகும்.
ஒருவருக்கிருக்கின்ற ஆசையில் தனது கருத்தினை கூறுகின்ற உரிமையில் தவம் கூறியிருந்தார் என்பதற்காக அரசியலில் ஒட்டுண்ணிகள் என்றும், ஒற்றுமை அற்ற சமுதாயத்தினர் என்றும், இந்த ஆசையை நினைப்பதே தவறு என்றும் கூறுகின்ற கட்டுரையாளர் இந்தியாவில் அபுல்கலாம் போன்ற சிறுபான்மையினர் நாட்டின் ஜனாபதியாக இருந்ததை நினைக்கவில்லையா? கடந்த ஜனாதிபதி தேர்தலில் சகோதரர் சிவாஜி லிங்கம், மயோன் முஸ்தபா போன்றோர் போட்டியிட்டமை ஜனாதிபதியாக தெரிவாகவா? இல்லையே....!

மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் 2012ஆம் ஆண்டை நோக்கிய வியூகத்திற்கு அடையாளம் 2012இல் ஜனாதிபதியாவதா? மூவீனங்களும் ஒற்றுமைபட்ட சமுதாயமாக இருந்து எங்களுக்குள் இருக்கின்ற உளக்கறலை இல்லாமலாக்கி நாட்டின் அபிவிருத்தியில் மூவினத்தின் பங்களிப்பு அவசியம் என்கிற எண்ணத்தில் மாற்றுக் கட்சியை உருவாக்கி அதனை முன் கொண்டு சென்றார். அவரின் அரசியல் ஞானியாக அமரர் செல்வநாயகம் இருந்திருக்கின்றார் என்பதற்காகவும், முஸ்லிம்கள் பல கூறுகளாக பிரிந்துள்ளார்கள் என்பதற்காக நாம் லாயக்கற்றவர்கள் அல்ல என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்வதும் அவசியமாகும். வெள்ளிக்கிழமைகளிலும், ஐவேளையிலும் ஒற்றுமையுடன் தொழுகின்றனர். புனித ஹஜ்ஜனின்போது ஒற்றுமை காட்டப்படுகின்றது. அதற்காக முஸ்லிம்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று நீங்கள் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
சில அரசியல் விடயங்களுக்காக பிரிந்திருந்தாலும் முஸ்லிம்களுக்குள் எதிர்படுகின்ற தடைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு யாரும் பின்நிற்க மாட்டார்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அம்பாரை மாவட்டத்தில் பெரும்பான்மையாகவும், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இரண்டாம் நிலையிலும் வாழ்கின்ற ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒற்றுமையாக செயற்பட்டால் தவம் கூறியதுபோல முஸ்லிம் முதலமைச்சரைப் பெறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை.
இன்றுகூட பதில் முதலமைச்சராக மாகாண அமைச்சர் கௌரவ எம்எஸ். உதுமாலெவ்வை அவர்கள் இருக்கின்றார். ஏன் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் எத்தனையோ தமிழ் அமைச்சர்கள் இருந்தும் ஒரு முஸ்லிமிடம் கொடுப்பது என்பதையாவது சிந்தித்துப் பாருங்கள். அதற்காக மற்றவர்களிடம் நம்பிக்கை இல்லை என்பதற்காகவா? இல்லை. நமது மாகாணத்தில் நமது சகோதரன் பதில் முதலமைச்சராக இருப்பதில் தவறே இல்லை என்று நினைத்தாரோ என்னவோ, கௌரவ முதலமைச்சர் வெளிநாடு செல்லும் போதெல்லாம் கிழக்கு வாழ் முஸ்லிம்களை கௌவரப்படுத்துகின்றார் என்றே நாம் எண்ணுகின்றோம்.
மேலும், அரவம் என்றால் பாம்பு என்பதற்காக, அரபர் என்று திரிபட்டு அழைத்தற்காக பாம்பினை வழிபடுபவர்கள் என்பதை ஏன் கூறினார் என்பது புரியவில்லை. ஒரு புதிய மொழி பேசியவர்கள், அவர்கள் அராபியர்கள் என்பதற்காக அரவர் என்பது தவறாகும். அக்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் மொழிநடையில் பின்நிலையில் இருந்திருக்கலாம். அவர்கள் அரபர் என்று கூறியிருக்கலாம். முஸ்லிம்கள் ஒரே இறைவனை வணங்குபவர்கள். நபிவழி நடப்பவர்கள். பாம்பு, பூச்சிகளை எல்லாம் வணங்குபவர்கள் அல்ல.
கலிங்கத்துப் பரணியில் கூறப்பட்ட அரபர்க்கும், அராபியருக்கும் தொடர்பை ஏற்படுத்துவது தவறாகும். எனவே, தனியரசியல் சித்தாந்தம் முஸ்லிம்களிடம் காணப்பட்டாலும் ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாகவும், அவர்களுக்கு பங்கு கிடைக்கின்றபோது இந்த சிந்தாந்தத்தின் வெளிப்பாடு தென்படும் என்பதையும், இவ்வாறான கருத்துக்களை தவறான முறையில் வெளியிட்டு நமது சகோதர இனத்தின் மீதான ஒற்றுமை குலைவை ஏற்படுத்துவதிலிருந்து தவிர்த்து, கிழக்கில் மூவினமும் ஒன்றுமையாக வாழ நல்ல சூழ்நிலை ஏற்பட்டுள்ள இச்சந்தர்ப்பங்களில் நாட்டின் அபிவிருத்தியிலும், தமது பங்குக்குக்கான வளத்தையும் ஒற்றுமையாக நமது பெரும்பான்மையிடம் கேட்பற்கு முயற்சி செய்வோம்.
அறிஞர் தோமஸ் கார்லைஸ் கூறுவதுபோல “உனக்கு அருகில் இருக்கிற கடமையை முதலில் செய். பிறகு இரண்டாவது கடமை தெளிவாக உனக்குத் தெரிவதைக் காண்பாய்” என்று அழகாகக் கூறுகின்றார். இதன்படி உங்களது கடமை முடிந்துவிட்டால் தெரிவது நாம்தானே! செய்வதற்கு முயற்சி செய்யுங்கள் ஐயா!!!!