Published On: Friday, February 24, 2012
64 இலட்சம் மரக்கன்றுகள் நடும் முதல்வர் ஜெயலலிதா
(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
முதல்வரின் 64ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வனத்துறை சார்பில், 32 மாவட்டங்களிலும், 2 இலட்சம் மரக்கன்றுகள் வீதம், மொத்தம், 64 இலட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தமிழகம் முழுவதும் 64 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை, ராஜாஜி சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் ஆலமரக்கன்று ஒன்றினை நட்டு துவக்கி வைத்தார்கள்.

தமிழகத்தில் வனவளத்தினை அதிகரிக்கவும், உயிர்ப் பன்மையினைப் பாதுகாத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வாகன எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், காற்று மண்டலம் மாசு அடைந்து வருகிறது. மரங்கள் காற்று மண்டலத்தில் உள்ள மாசுப்பட்ட வாயு, கண்ணுக்கு புலப்படாத நுண்துகள்கள் ஆகியவற்றை தம்மிடத்தே ஈர்த்து நமது சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கின்றன.
சூழலியல் சமன்பாட்டினை நிலைநிறுத்தவும், வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்குடன், வனப்பகுதிகளில் மட்டுமின்றி, வனத்திற்கு வெளியே இருக்கும் காலியிடங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க மாபெரும் மரம் நடும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதற்கேற்ப, வனத்துறையின் சார்பில் மாவட்டத்திற்கு 2 இலட்சம் மரக்கன்றுகள் வீதம் மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மொத்தம் 64 இலட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்றிடும் வகையில், தமிழகம் முழுவதும் 64 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை, ராஜாஜி சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் ஆலமரக்கன்று ஒன்றினை நட்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி மேயர், தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

