Published On: Friday, February 24, 2012
முத்தரப்பு கிரிக்கட் தொடர்; இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சி.பீ கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான இன்றைய போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சி.பீ கிண்ண முத்தரப்பு கிரிக்கட் போட்டி தொடரின் இன்றைய போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாடியது.
அவுஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மேத்யு வடே 5 ஓட்டங்களும், வார்னர் 7 ஓட்டங்களும் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய பீட்டர் பாரஸ்ட் சதத்தை கடந்து 104 ஓட்டங்களும், மைக்கேல் கிளார்க் 72 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 280 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து 281 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தில்சன் 3 ஓட்டங்களும் அடுத்து களமிறங்கிய சங்கக்கரா 22 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அணித்தலைவர் ஜெயவர்த்தனே 85 ஓட்டங்களும், சண்டிமால் 80 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி 49.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 283 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.