Published On: Friday, February 24, 2012
ஜெயலலிதா இன்று 64ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 64ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. ஏழை, எளிய மக்கள், நலிந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டாடினர்.கோவில்களில் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளை அக்கட்சியினர் மிகச் சிறப்பாக கொண்டாடினர். இது குறித்து அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்த வந்த செய்திக் குறிப்பில், இன்று காலை வெள்ளிக்கிழமை 10.00 மணி அளவில், தலைமைக் கழகத்தில், ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா சிறப்பு மலரை, கழக அமைப்புச் செயலாளர் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் வெளியிட, அதனை கழக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் பி. வேணுகோபால்,எம்.பி., பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 64 கிலோ எடையுள்ள கேக்கினை, கழக அமைப்புச் செயலாளர் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் வெட்டி, தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள் மற்றும் அங்கு குழுமிருந்த ஏராளமான கழகத் தொண்டர்கள், பொது மக்களுக்கு வழங்கியும், இனிப்புகளை வழங்கியும் பிறந்த நாளைக் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்புச்செயலாளர் பி.எச். பாண்டியன், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், பழனியப்பன், கே.வி. ராமலிங்கம், எம்.சி. சம்பத் மற்றும் சுலோசனா சம்பத், செம்மலை எம்.பி., மாவட்ட செயலாளர்கள் செந்தமிழன், கலைராஜன், வெற்றிவேல், புரசை கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், பொள்ளாச்சி ஜெய ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் பிறந்த நாளையொட்டி சபாநாயகர் ஜெயக்குமார் சார்பில் வண்ணாரப்பேட்டை ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவ மனையில் இன்று பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சபாநாயகர் டி. ஜெயக்குமார் குழந்தைகளுக்கு தங்க மோதிரமும் பெற்றோர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமை சபாநாயகர் டி. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் புரசை கிருஷ்ணன், ராயபுரம் பகுதி செயலாளர் இரா. பழனி, கவுன்சிலர் நாகம்மாள் மற்றும் அரசு, உதயன், சந்திரன், மணி தேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்சென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி அன்னதான வழங்கப்பட்டது. மைத்ரேயன் எம்.பி. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ. அர்ஜூனன் செய்து இருந்தார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர் டி. சிவராஜ், பகுதி செயலாளர் ஜெயச்சந்திரன், ராமலிங்கம், ராமசாமி, பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் பஸ் நிலையம் அருகே நேற்று இரவு 12 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 64 கிலோ கேக் வெட்டப்பட்டது. டாக்டர் வேணுகோபால் எம்.பி. கேக் வெட்டினார். அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் 640 பெண்களுக்கு புடவைகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி செய்திருந்தார். ஐ.சி.எப். உதயகுமார், முனுசாமி, பட்மேடு சாரதி, கந்தசாமி, எஸ்.ஆர். ரவி, சின்ராஜ், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கந்தன்சாவடி காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மதியம் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கண்ணகி நகரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இது தவிர தொகுதி முழுவதும் அனைத்து வார்டுகள், கிளைகளிலும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அன்ன தானம், ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை மைத்ரோயன் எம்.பி., மேயர் சைதை துரைசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே.பி. கந்தன் எம்.எல்.ஏ. செய்து இருந்தார். துணை மேயர்பெஞ்சமின், மண்டல குழு தலைவர்கள் லியோ சுந்தரம், கொட்டிவாக்கம் ராஜாராம், கவுன்சிலர்கள் அமுதா வெங்கடேஷ், ஜனாகிராமன், பூர்ணிமா, டி.சி. கோவிந்தசாமி, நிலைக் குழு தலைவர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் மத்திய மாவட்ட செயலாளர் சிட்ல பாக்கம் ராஜேந்திரன் எம்.பி. ஏற்பாட்டில் மதுராந்தகம் ஏரிகாத்தராமர் கோவில், திருமலை வையாவூர் கோவில்களில் இன்று அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மாலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம், திருக்கழுக்குன்றத் தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பேருக்கு சேலைகளையும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வழங்குகிறார்.