Published On: Friday, February 24, 2012
இலங்கை தமிழர்கள் தொடர்பான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானங்கள்

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் 20ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு பெப்ரவரி 22ஆம் திகதி முதல் நாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கட்சியின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். மூன்றாம் நாள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
இலங்கையில் இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதல் முடிந்து மூன்றாண்டுகள் முடியப்போகிறது. ஆயுத மோதல் முடிந்தவுடன் இலங்கைத தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதி அமுலாகவில்லை. இலங்கைத் தமிழர்களின் துயரம் இன்னும் தொடர்கிறது.
போர்க்காலத்தில் மனித உரிமைகளை மீறி வன்செயல்கள் புரிந்திட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது, நேர்மையான விசாரணை நடத்திடவும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் இலங்கை அரசு மறுத்து வருகிறது. சொந்த நாட்டிலேயே அகதிகளாய் வாழ்விடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெறுகிறது.
அவர்களின் புனர்வாழ்விற்கான, மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் போதுமான அளவு நடைபெறவில்லை. ஆனால், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்களை குடியமர்த்திட இலங்கை அரசு முயற்சிக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் ஆயுத மோதல் காலத்திலும், அதற்கு முன்பும் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, இன்றைக்கும் சிறையில் இருக்கக் கூடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மேலும் தமிழர்கள் வாழக்கூடிய பகுதிகளில் இன்றும் இராணுவ நிர்வாகம் தொடர்கிறது. உடனடியாக இராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டு சிவில் நிர்வாகம் கொண்டு வரப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், எந்தவித முன்னேற்றமும் இல்லை. பேச்சுவார்த்தை நடைபெறுகின்றபோதே இலங்கை அரசு இந்தப் பிரச்சனையை பாராளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு விடுவது என்று முடிவு செய்திருக்கிறது. இலங்கை அரசின் இம்முடிவு பிரச்சனைக்கு தீர்வு காண உதவாது.
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, நிலம், காவல்துறை உள்ளிட்ட மாநில சுயாட்சி அந்தஸ்துடன் கூடிய அதிகாரங்களை வழங்குவதற்கும், இலங்கையில் தமிழ் மொழி, தமிழர்களுக்கு சம வாய்ப்பு, சம உரிமைகளுடனான பாதுகாப்பு ஆகியவற்றை காக்கும் விதத்திலும், சட்டத் திருத்தம் செய்திட இலங்கை அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட இலங்கை அரசை நிர்ப்பந்திக்க இந்திய அரசின் தலையீடு போதுமானதாக இல்லை.
எனவே, இலங்கைத் தமிழர் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணவும், போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு நிவாரணங்கள் கிடைத்திடவும், மீள்குடியேற்றம் துரிதமாக நடைபெறவும், இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென கட்சியின் 20ஆவது மாநில மாநாடு இந்திய அரசை வலியுறுத்துகிறது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்தரம் மேம்படுத்தப்பட வேண்டும், பள்ளிகளின் அடிப்படை வசதிகளும், தேவையான ஆசிரியர்கள் பணி நியமனமும் செய்யப்பட வேண்டும். அனைவருக்கும் ஒரே தரமான கல்வி கிடைத்திட வழி செய்ய வேண்டும்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் மத்திய அரசு கட்டணத்தை நிர்ணயிக்க வலியுறுத்த வேண்டும். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கின்ற தீர்மானமும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கையும், அவர்களுக்குத் தேவையான சட்டம், நிதி, கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.