Published On: Sunday, February 26, 2012
தனுஷின் '3' படத்தை ஏலத்தின் மூலம் விற்க முடிவு

`கொல வெறி' பாடலால் உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கும் `3' படத்தை ஏலத்தின் மூலம் விற்க முடிவு செய்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா முதன்முதலாக, `3' என்ற படத்தை டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகனாக தனுஷ் நடித்து இருக்கிறார். கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து இருக்கிறார். தனுசின் தந்தை கஸ்தூரிராஜா தயாரித்து இருக்கிறார்.
அனிருத் இசையமைத்துள்ளார். அவருடைய இசையில் உருவான `கொல வெறி' என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங் அளித்த விருந்தில் தனுஷ், ஸ்ருதி ஆகிய இருவருமே கலந்து கொண்டார்கள்.
`கொல வெறி' பாடலின் தாக்கமும், பிரதமர் அளித்த கவுரவமும் `3' படத்தை உலக அளவில் கோண்டு போய் சேர்த்து இருக்கிறது. இது, திரைப்பட வினியோகஸ்தர்கள் மத்தியில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாகியிருக்கும் `3' படத்தின் மொத்த உரிமையையும் ரூ.50 கோடிக்கு வாங்கிக்கொள்வதாக பிரபல வினியோகஸ்தர்கள் வியாபாரம் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்.
தனுஷ் நடித்து ஏற்கனவே வெளிவந்த `திருடா திருடி' என்ற படத்தின் `என்.எஸ்.சி.' (வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு) வினியோக உரிமை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் `3' படத்தையும் ஏலம் விட்டு விற்பனை செய்ய படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரிராஜா முடிவு செய்திருக்கிறார்.