Published On: Thursday, February 16, 2012
நீர்கொழும்பு பஸ் டிப்போ ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு
(கலாநெஞ்சன்)
இந்தமாத வேதனம் இதுவரை வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு, பெரியமுல்லையில் அமைந்துள்ள பிரதான பஸ் டிப்போவைச் சேர்ந்த ஊழியர்கள் நேற்று நண்பகல் முதல் பஸ்களை சேவையில் ஈடுபடாமல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, பிரதான பஸ் டிப்போவில் பணியாற்றும் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் என 300 இற்கும் மேற்பட்டவர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக 48 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஐந்து பஸ்கள் தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தப்படுபவை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவிக்கையில்; எமது மாத சம்பளம் ஒவ்வொரு மாதமும் 8ஆம் திகதி வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த மாத வேதனம் இதுவரை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக நாங்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த 12 வருட காலமாகவே எமது வேதனம் குறித்த திகதியில் வழங்கப்படாமல் உள்ளது என்றனர்.