Published On: Friday, February 24, 2012
தேர்தலில் அரசாங்கத்தை பிழையாகக் காட்டி முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிபெறுகிறது
(பி.எம்.எம்.ஏ.காதர்)
கிழக்கு மாகாண ஆளுநரின் கல்முனை வருகை தடைப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும் முஸ்லிம் காங்கிரஸின் சில மாகாணசபை உறுப்பினர்களுமே காரணமென தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை இரவு அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே துல்கர் நயீம் இதனைத் தெரிவித்தார்.
கல்முனை பிரதேசத்திலுள்ள தமிழ் மக்களுக்கு, கல்முனை நகரில் அமைக்கப்பட்டுள்ள பஸ்நிலைய கடைத்தொகுதியில் விகிதாசாரப்படி கடைகளை ஒதுக்காமல் விட்டதால், அவர்கள் கறுப்புக்கொடி காட்டத் தயாராகவிருந்தார்கள் என முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. தமது தவறுகளையும், உட்பூசல்களையும் மூடிமறைக்க இவர்கள் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள் என மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீம் கொடுத்த அழுத்தம் காரணமாவே ஆளுநரின் வருகை தடைப்பட்டிருக்கிறது. கல்முனை மாநகரில் மூவின மக்களும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றார்கள். கல்முனை மாநகரில் அபிவிருத்திகளை முன்னெடுக்கவேண்டிய தேவைகள் இருக்கின்றன. இதனடிப்படையில் கிழக்கு மாகாண ஆளுநரின் வருகையை நாங்களும் ஏற்றுக்கொண்டோம். மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பிற்கு பின் அம்பாறை மாவட்ட அபிவிருத்தியில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாதான் அக்கறையுடன் செயற்படுகிறார்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்திருக்கின்ற போதும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தியில் எந்தவித அபிவிருத்திக்கும் வழிகாட்டவில்லை. தேர்தல் காலங்களில் மக்கள் முன்வந்து அரசாங்கத்தை பிழையாக சுட்டிக்காட்டி மக்களை திசைதிருப்பி முஸ்லிம் காங்கிரஸ் காலத்திற்கு காலம் வெற்றி பெற்றுக்கொள்கிறது. அதன்பின் மக்களைப் பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் காலம் கடத்துகிறது என துல்கர் நயீம் மேலும் தெரிவித்தார்.