Published On: Saturday, February 25, 2012
மாணவியை கடத்தி 5 இலட்சம் ரூபா கப்பம்

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வெடிக்காரன்வலசை கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி ரெத்தினம். இவர்களுக்கு சுவேதா (வயது 8) என்ற மகள் உள்ளார். இவர் பழனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். குப்புசாமி கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
மேலும் பால் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார். சுவேதா தினமும் பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று வருவாராம். வழக்கம்போல நேற்று மாலை சுவேதா பள்ளிக்கு சென்று விட்டு வீடு அருகே பள்ளி வேனில் வந்து இறங்கினார். பின்னர் அவர் வீடு நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது சுவேதாவை பின் தொடர்ந்து காரில் வந்த “மர்ம” கும்பல் சுவேதாவை திடீரென வாயை பொத்தி காரில் கடத்தி சென்று விட்டனர். இதற்கிடையே வெகுநேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் சுவேதாவின் பெற்றோர் மகளை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினர். அந்த சமயத்தில் சுவேதாவின் தந்தை செல்போனுக்கு ஒரு போன் வந்தது.
அதில் பேசிய ஆசாமி உனது மகளை நாங்கள்தான் கடத்தி வைத்து உள்ளோம். ரூ.5 லட்சம் தந்தால் மகளை விட்டு விடுவோம் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த குப்புசாமி மகள் கடத்தல் சம்பவம் குறித்து கள்ளிமந்தையம் போலீசில் புகார் செய்தார். புகாரில் எனது மகளை ஒரு கும்பல் கடத்தி சென்று ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டுகின்றனர்.
எனது மகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின்பேரில் போலீசார் பள்ளி மாணவி கடத்தல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் கடத்தல் கும்பலை பிடிக்க டி.எஸ்.பி. ஜானகிராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில் மாணவியை கடத்தல் கும்பல் திருப்பூரில் கடத்தி வைத்திருப்பதாக போலீசாருக்கு தெரியவந்து உள்ளது. இதையடுத்து நேற்று இரவு தனிப்படை போலீசார் திருப்பூருக்கு விரைந்து உள்ளனர்.
ரூ.5 லட்சம் கேட்டு பள்ளி மாணவி கடத்தப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

