Published On: Friday, February 24, 2012
அமெரிக்க பெண்ணை மணந்த கோவை தொழிலதிபர்
(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
கோவை போத்தனூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் கார்த்திகேயன் (வயது 36). டெக்ஸ்டைல் மேலாண்மை படிப்பு முடித்துவிட்டு ஏற்றுமதி தொழில் செய்துவருகிறார். கடந்த 14 வருடங்களாக அமெரிக்காவுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்துவருகிறார். தொழில் தொடர்பாக அமெரிக்காவில் முனிசொடா மகாணத்தில் தங்கியிருந்தபோது அங்குள்ள கடைக்கு வந்த பிரெஞ்சு பள்ளி ஆசிரியை லைலா லீரா ஹெலன் பெர்க் (வயது 31) என்பவரை சந்தித்தார். இருவரும் நட்புடன் பழகினார்கள். லைலாவுக்கு இந்து கலாசாரம், பூஜைகள் மிகவும் பிடித்துவிட்டது. அந்த ஈர்ப்பின் காரணமாக லைலா, கார்த்திகேயனை காதலித்தார்.

கடந்த 3 வருடங்களாக காதல் வானில் சிறகடித்து பறந்த பறவைகள் திருமண பந்தத்தின் மூலம் வாழ்வில் இணைய முடிவு செய்தனர். லைலாவின் தந்தை ஸ்டீபன் பெர்க். முனிகொடாவில் பிரபல டாக்டர். அவர் தனது மகளின் முடிவுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பச்சைக்கொடி காட்டினார். கார்த்திகேயனின் வீட்டிலும், உனது விருப்பம் எதுவோ அதுவே எங்கள் விருப்பம் என்று அவரது தாயார் பெருந்தன்மையோடு கூறினார். அதன்படி இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்தனர். காதலர்கள் தங்களது பெயரை இந்து பெயராக மாற்றிக்கொண்டனர். அவர்கள் கார்த்திக் ஒம், லைலா ஓம் என பெயரை மாற்றிக் கொண்ட பின்னர் அவர்களின் திருமணம் கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் தடபுடலாக நடைபெற்றது.
மணமக்களை வாழ்த்துவதற்கு ஜப்பான், அயர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும், கோவை, திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கார்த்திக் உறவினர்களும் வந்திருந்து மலர்தூவி வாழ்த்து தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக கோவையில் முதல்முறையாக பிளமிங்கோ நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாலையில் பரதநாட்டியம் நடக்கிறது. முன்னதாக அமெரிக்காவிலிருந்து கோவை வந்த மணமக்களுக்கு நாட்டுப்புற கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், புலியாட்டம், கரகாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காதல் திருமணம் குறித்து லைலா ஓம் நிருபரிடம் கூறியதாவது; இந்து கலாச்சாரம் பாரம்பரியமும், தொன்மையும் வாய்ந்தது. இந்து கடவுளான கிருஷ்ணரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பிரெஞ்சு ஆசிரியையாக இருந்தாலும், இசைத்துறையில் பட்டம் பெற்றுள்ளேன்.அதனால் நன்றாக புல்லாங்குழல் இசைக்கும் பழக்கம் உண்டு. இந்து சமய சடங்கு சம்பிரதாயங்கள் குடும்ப உறவுகளை மேம்படுத்துவதாக இருப்பதால் எனக்கு அதன்மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்.

