Published On: Sunday, February 19, 2012
நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடிய வகையில் குழுவொன்று ஜெனீவா பயணம்

ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நெருக்கடிகளை எதிர்கொள்ளக் கூடிய வகையில் குழுவொன்றை அரசாங்கம் ஜெனீவாவுக்கு அனுப்பி வைக்கவுள்ளது. இலங்கைக்கு எதிராக எடுக்கப்படும் தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கப்போவதாக தெரிவித்துள்ள முடிவையடுத்து, ஜெனீவா கூட்டத்தொடருக்கான இலங்கையின் பிரதிநிதிகள் குழு 52 பேர் அடுத்தவாரம் பயணமாகவுள்ளது.
இலங்கையின் பிரதிநிதிகள் குழுவுக்கு அமைச்சர்கள் ஜி.எல். பீரிஸ் மற்றும் மகிந்த சமரசிங்க ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்களேயான நிலையில், இதனை நடைமுறைப்படுத்த போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை என்ற வாதத்தையே இவர்கள் முன்வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், மகிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், அனுர பிரியதர்சன யாப்பா, ஜோன் செனிவிரத்ன, டிலான் பெரேரா, மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளனர்.