Published On: Wednesday, February 29, 2012
இலங்கை அரசை ஆதரிக்காதீர்கள் - மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம்

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
இலங்கை அரசை ஆதரித்து கூட்டுக் குற்றவாளியாகாதீர் என்று கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். மகிந்த சமரசிங்க, ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் நடைபெற இருக்கின்ற மிக முக்கியமான வாக்குப்பதிவில், இந்தியா இலங்கை அரசை ஆதரிக்கும் என்று தெரிவித்திருப்பது பேரதிர்ச்சியாக உள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே.காந்தா, இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவை பெப்ரவரி 26ஆம் திகதி நேரில் சந்தித்து, ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் கூட்டத்தில், இலங்கையை இந்தியா ஆதரிக்கும் என உறுதி அளித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது உண்மையாக இருக்குமானால், இந்த நடவடிக்கை தமிழர்களுக்கு எதிராக இந்தியா செய்கின்ற மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.
உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் இலங்கை அரசு நிறுத்தப்படுவதைத் தடுக்க இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளுமானால், இந்தியாவும் கூட்டுக் குற்றவாளி என்ற நிலைமையே ஏற்படும். ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு ஆதரவான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் வைகோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

