Published On: Friday, March 09, 2012
மே-11 இல் பிரசன்னாவை மணக்கிறார் சினேகா

நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் சென்னையில், மே மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெறுகிறது.
நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் `அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில், முதன்முதலாக ஜோடியாக நடித்தார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அமெரிக்காவில் நடந்தது. அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியது.
இந்த காதலை, இரண்டு பேருமே முதலில் மறுத்து வந்தார்கள். ``நாங்கள் இருவரும் காதலர்கள் அல்ல. நண்பர்கள். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது'' என்று கூறி வந்தார்கள்.
2 மாதங்களுக்கு முன்பு பிரசன்னா, ``எனக்கும், சினேகாவுக்கும் இடையே காதல் இருப்பது உண்மைதான். நாங்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். எங்கள் இரண்டு பேரின் பெற்றோர்களும் சந்தித்துப்பேசி, திருமணத்தை முடிவு செய்வார்கள்'' என்று காதல்-திருமண அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது, சினேகா அமெரிக்காவில் இருந்தார். பிரசன்னாவின் காதல்-திருமண அறிவிப்பை அவர் மறுக்கவில்லை.
அதன் பிறகு சினேகாவும், பிரசன்னாவும் சில நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டார்கள். கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி காதலர் தினத்தன்று இருவரும் ஜோடியாக போட்டோவுக்கு `போஸ்' கொடுத்தார்கள். காதலுடன், பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டார்கள்.
சினேகாவின் பெற்றோர்களும், பிரசன்னாவின் பெற்றோர்களும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது, சினேகா-பிரசன்னா திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். அதன்படி, இருவருக்கும் வருகிற மே 11-ந் தேதி, சென்னை வானகரம் அருகில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், திருமணம் நடக்கிறது.
திருமணத்துக்கான வேலைகள் இப்போதே தொடங்கி விட்டன. ``திருமணத்துக்குப்பின், சினேகா விரும்பினால் நடிக்கலாம். விரும்பவில்லை என்றால் நடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். அதில், நான் தலையிட மாட்டேன். வாழ்க்கை வேறு, தொழில் வேறு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்'' என்று `தினத்தந்தி' நிருபரிடம் பிரசன்னா தெரிவித்தார்.