Published On: Thursday, March 01, 2012
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டி; இந்திய அணிக்கான வீரர்கள் அறிவிப்பு

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் வங்கதேசம் தலைநகர் டாக்காவில் வருகிற மார்ச் 11ம் திகதி தொடங்கி 22ம் திகதி வரை நடைபெறுகிறது.
இந்தியா, இலங்கை, வங்கேதசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.
இந்நிலையில் ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரிய தெரிவுக் குழுவினர் வீரர்களைத் நேற்று தெரிவு செய்தனர்.
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் அதிரடி துடுப்பாட்ட காரர் விரேந்திர சேவாக், வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் யூசுப் பதான், கொல்கத்தா வீரரான அசோக் தின்டா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அணியின் தலைவராக மகேந்திர சிங் தோனியும், துணைத் தலைவராக விராட் கோஹ்லியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அணியின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஆசிய கிண்ணப் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் 100வது சதமடிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையிலேயே சச்சினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முத்தரப்புத் தொடரில் சரியாக விளையாடா விட்டாலும், ரெய்னாவும், ரவீந்திர ஜடேஜாவும் அதிர்ஷ்டவசமாக ஆசிய கோப்பை போட்டியிலும் இடம்பிடித்துள்ளனர்.
ரஞ்சிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி 37 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, துலீப் டிராபி போட்டியில் 3 ஆட்டங்களில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் விளைவாகவே இப்போது அணியில் இடம்பிடித்துள்ளார் அசோக் தின்டா.
அணி விவரம்: மகேந்திரசிங் தோனி (தலைவர்), விராட் கோலி (துணை தலைவர்), சச்சின் டெண்டுல்கர், கெளதம் கம்பீர், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பிரவீண் குமார், வினய் குமார், ராகுல் சர்மா, யூசுப் பதான், மனோஜ் திவாரி, இர்ஃபான் பதான், அசோக் தின்டா.