Published On: Monday, March 05, 2012
இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்; 200 பேர் கைது

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இலங்கை தூதரகம் முன்பு இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அறிவித்து இருந்தது. இதன்படி ஆழ்வார் பேட்டையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் இன்று காலை குவிந்தனர். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ. பீமாராவ், மாநில நிர்வாகிகள் கண்ணன், சுவாமிநாதன் முன்னாள் எம்.எல்.ஏ. பெரம்பூர் மகேந்திரன், மாவட்ட செயலாளர்கள் சுந்தர்ராஜன், பாக்கியம், மோகன் உள்பட 200 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சில இளைஞர்கள் பொலிஸாரின் தடுப்பையும் பொருட்படுத்தாமல் இலங்கை தூதரகத்திற்குள் நுழைய முயன்றனர். பொலிஸார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தொண்டர்கள் பிரதான வீதியில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பீமாராவ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 200 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

