Published On: Sunday, March 11, 2012
திருக்குமரன் நடேசன் தாக்கப்பட்டது தொடர்பில் பொலிஸார் மூவர் இடமாற்றம்

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
ராமேஸ்வரத்தில், ஜனாதிபதியின் சகோதரியின் கணவர் திருக்குமரன் நடேசன் தாக்கப்பட்டது தொடர்பாக, தமிழக புலனாய்வுத்துறை பொலிஸார் மூவரை பணியிட இடமாற்றம் செய்துள்ளது. ராமேஸ்வரத்திற்கு, பல ஆண்டுகளாக, வந்து செல்லும் இலங்கை திருக்குமரன் நடேசன் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், கடந்த ஜனவரி 10ஆம் திகதி இந்தியா சென்றிருந்தார்.
அக்னித் தீர்த்தக் கடற்கரையில் குளிக்கச் செல்வதாக கூறியவர், அங்கிருந்து தனுஷ்கோடி செல்வதாகக் கூறிவிட்டு, பொலிஸாருக்கு தெரியாமல், புரோகிதர் வீட்டிற்கு சென்றார். அப்போது, நாம் தமிழர் மற்றும் ம.தி.மு.க., கட்சியினர் இவரை தாக்கினர். இதையொட்டி அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா, "இலங்கை முக்கிய பிரமுகர்கள் தமிழகத்திற்கு வருவது குறித்து, முன்கூட்டியே மாநில அரசுக்கு, மத்திய மற்றும் இலங்கை அரசு தகவல் தெரிவித்தால்தான், பாதுகாப்பு வழங்க முடியும் என, வலியுறுத்தி இருந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் பணியாற்றி வந்த ஏட்டுகள் நாராயணன் (கியூ பிரிவு), செல்வகுமார் (எஸ்.பி., தனிப்பிரிவு), உக்கிரபாண்டி (எஸ்.பி., - சி.ஐ.டி.,) ஆகியோர் வேறு ஊர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.