Published On: Monday, March 05, 2012
ஜெயலலிதாவின் இலங்கைக்கு எதிரான கூற்றுக்கு கண்டனம்

அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடருக்கு கொண்டுவரவிருந்த கண்டனப் பிரேரணைக்கு இந்திய அரசாங்கம் தனது ஆதரவை அளிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்தை இஸ்லாமிய ஒருமைப்பாட்டின் முன்னணியின் தலைவர் ரியாஸ் சாலி கண்டித்துள்ளார். இலங்கைக்கு எதிராக செயற்படுவதற்குப் பதில் ஜெயலலிதா உண்மையிலேயே எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளை தமிழ்நாட்டில் இருந்தும் செயல் இழக்கச் செய்தமைக்காக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்கு மாறாக இவ்விதம் நடந்து கொள்வது கண்டனத்துக்குரிய செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பயங்கரவாதத்தை பூண்டோடு அழித்துக் கட்டுவதற்கு இந்திய அரசாங்கம் செய்த உதவிகளை நாம் மறக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அல்ஹாஜ் ரியாஸ் சாலி இந்தியாவும் தமிழ் நாட்டு அரசாங்கமும் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி ஈட்டிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஜெயலலிதா கடந்தகால நிகழ்வுகளை இலகுவில் மறந்துவிடுகின்றார். எவ்விதம் ராஜீவ் காந்தியை எல்.ரீ.ரீ.ஈ. கொலை செய்தது என்பதை நாம் அவருக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் என்று அவர் கூறினார். எங்கள் நாட்டுப் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொள்வோம்.
தயவு செய்து வெளிநாடுகள் இதில் தலையிடக்கூடாது என்று தெரிவித்த ரியாஸ் சாலி, நாம் தாய்நாட்டுக்கு ஏற்புடைய ஒரு சமாதானத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். அல்குர்ஆனில் கூறியிருப்பதைப் போன்று நாட்டு மக்கள் நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். இஸ்லாமிய ஒருமைப்பாட்டு முன்னணி கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி அவர்களுக்கு பிரார்த்தனை ஒன்றையும் நடத்தியது.

