(கலாநெஞ்சன்)
சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஆண்டு விழா நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையத்தின் தலைவர் வ.வடுகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வ ரூபானந்தா பிரதம விருந்தினராகவும், நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ.ஜெயராமன், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் எஸ் .கணேசலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் இந்தியாவின் திருவன்னாமலையிலிருந்து வருகை தந்திருந்த திருப்பாத சுவாமி மற்றும் யோகானந்த ஞானதேசிகர் சுவாமி ஆகியோர் விஷேட விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
விழா ஒருங்கிணைப்பாளர் ப.ரஜனிராஜ் வரவேற்புரை நிகழ்த்த, நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையத்தின் தலைவர் வ. வடுகராஜா தலைமை உரை நிகழ்த்தினார். நீர்கொழும்பு சித்திவிநாயகர் ஆலய பிரதம குருவான குகேஸ்வரக் குருக்கள் ஆசியுரை வழங்கினார். விருந்தினர்களின் உரைகளும் அங்கு இடம்பெற்றன. இந்நிகழ்வில் நீர்கொழும்பு, தோப்பு - கொச்சிக்கடை, வத்தளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இந்து அநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.