Published On: Saturday, March 10, 2012
வன்னியின் ஒரு முஸ்லிம் வாரிசு

வன்னியின் முஸ்லிம் வாரிசே
வந்தவிடத்தில் நீ பட்ட
கஷ்டங்கள் போதும் போதும்
காலம் கனிந்துவிட்டது வா!
பத்து பேர்ச்சர்ஸ் பாரினிலே
பற்றுவைத்ததும் பதுங்கி இரூந்ததும்
கனவுடன் கல்வீடு கட்டியதும்
கதிகலங்கி கவலையுடன்
வாழ்ந்ததும் போதும்!
போதும் போதும் பொன்போன்ற - உன்
தாய்மண் அன்புக்கரம் நீட்டுகிறது
தாமதிக்காமல் தயங்காமல் ஓடிவா
உன் எதிர்காலச் சந்திகள்!
உலகில் சங்கடமின்றி சமனாக
வாழவேண்டுமெனில் இன்றே
புறப்படு எம் இன்ப தேசத்திற்கு!
காகத்தின் கூட்டினில் முட்டையிட்டு
குயில் தம்மினத்தைத் பெருக்கலாம்
ஆனால், கூடு ஒருபோதும் குயிலுக்குச்
சொந்தமாகாது எனும் தத்துவத்தை
இதயத்தில் பதித்து இன்றே புறப்படு!
அகதியெனும் நாமத்துடன் - நீ
அல்லும் பகலும் பட்டவேதனை போதும்
ஆண்டவன் அருள் சொரிந்துள்ளான்
அவனை நம்பி அம்பாய்புறப்படு
அன்னிய மண்ணில் அரிச்சுவடி படித்ததும்!
அம்மண்ணிற்கே உரமாகிப் போனதும்
எம்மினத்தின் தலைவிதியாய்ப் போனதே
எவ்வளவுகாலம் எம்மண்ணைப்பிரிந்து
ஏங்கித் தவிப்பது சொல்வீர்!
எப்போது ஊர் திரும்புவோம்
எனும் ஏக்கத்தோடே எம் உறவுகள்
மரணித்து மண்ணுடன் மண்ணாகிய
மனதை உருக்கும் செய்தியை மனதிலிருத்தி
ஊர் திரும்ப உறுதி எடு!
எம் மண்ணின் தமிழ்மொழி
எம் கலாசாரம் யாவும் மாறி
புதுமொழியும் புதுக்கலாசாரமும் எம்மைப்
பீடித்ததால் எம்தனித்துவம் தவறிற்றே!
- முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்

