Published On: Tuesday, September 27, 2011
இனி சவூதியில் பெண்களுக்கும் வாக்குரிமை

அரேபிய நாடுகளிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்காத நாடாக திகழ்ந்துவந்த சவூதி அரேபியா தற்போது அதிலிருந்து வெளிவரப்போகின்றது. அங்குள்ள பெண்களும் இனிமேல் வாக்களிக்கலாம் என்று சவூதி மன்னர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமையும், தேர்தலில் போட்டியிடும் உரிமையும் அமலுக்கு வருகிறது என்று அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அரேபிய நாடுகளிலேயே சவூதியில் மட்டுமே இதுவரை பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படாமல் இருந்து வருகிறது. மேலும் அங்கு பெண்களுக்கு மிகக்கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அரேபிய நாடுகளிலேயே சவூதியில் மட்டுமே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை பெண்கள் சந்தித்து வருகின்றனர்.
இதுபோன்ற பழையான கட்டுப்பாடுகளை எதிர்த்து சவூதி பெண்கள் போராட்டங்களில் குதிக்க ஆரம்பித்துள்ளனர். சமீப காலமாக தடையை மீறி கார் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து பெண்கள் பெரும் போராட்டங்களில் குதித்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் மீறுவதற்குள் அவற்றைத் தவிர்க்கும் நடைபெறும் நடவடிக்கைகளை எடுக்க சவூதி அரசு முடிவு செய்தது. அதன்படி முக்கியத்துவம் வாய்ந்த வாக்குரிமை அனுமதியை தற்போது பெண்களுக்கு அளித்துள்ளது சவூதி அரசு. இதற்கான உத்தரவை சவூதி மன்னர் அப்துல்லா பிறப்பித்துள்ளார்.

மன்னர் அப்துல்லா, காலத்துக்கேற்ற வகையில் அவ்வப்போது சில தாராள நடவடிக்கைகளையும், சீரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவரது இந்த பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் தேர்தலி்ல் போட்டியிடும் உரிமை உத்தரவு மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று தெரிகிறது.
மன்னரின் ஆலோசனை சபையான ஷுரா கவுன்சிலில் ஆற்றிய உரையின்போதுதான் மன்னர்அப்துல்லா இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அப்போது அவர் கூறுகையில், நாட்டின் மதக்குருமார்களுடன் நடத்திய தீவிர ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
சவூதியின் இந்த முக்கிய முடிவை அமெரிக்கா வரவேற்றுப் பாராட்டியுள்ளது.