Published On: Tuesday, November 22, 2011
2012ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டப் பிரேரணையை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் நேற்று பாராளுமன்றில் சமர்பித்தார். வரவு - செலவு திட்ட பிரேரணையை சமர்பித்து ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருக்கையில் எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வரவு - செலவு திட்டப் பிரேரணையை சமர்பித்து ஜனாதிபதி உரையாற்றுகையில் தெரிவித்த முக்கிய சில விடயங்கள் வருமாறு,
அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கும் 2012ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக நூற்றுக்கு 10 சதவீதம் சம்பள உயர்வு வழங்க தான் பரிந்துரைப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் மற்றும் கலைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்து கொள்ளவென விசேட நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கென 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 25 வருடத்திற்கு மேல் ஊடக மற்றும் கலை சேவையில் உள்ளவர்களுக்கு மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்ய 11 இலட்சம் ரூபா கடன் அடிப்படையில் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இலங்கையிலுள்ள ஒவ்வொரு பொலிஸாருக்கும் பிறக்கும் மூன்றாவது குழந்தைக்கும் தலா ஒரு லட்சம் ரூபா வழங்கவும் உயிரிழந்த இராணுவ வீரர்களின் தாய்மாருக்கு மாதாந்தம் தலா 750 ரூபா கொடுப்பனவு வழங்கவும் வரவு - செலவுத் திட்டத்தில் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளுக்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி பாராளுமன்றில் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள ஒவ்வொரு பொலிஸாருக்கும் பிறக்கும் மூன்றாவது குழந்தைக்கும் தலா ஒரு லட்சம் ரூபா வழங்கவும் உயிரிழந்த இராணுவ வீரர்களின் தாய்மாருக்கு மாதாந்தம் தலா 750 ரூபா கொடுப்பனவு வழங்கவும் வரவு - செலவுத் திட்டத்தில் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வருடத்தில் 8 லட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,கண்டி, நுவரெலியா, திருக்கோணமலை, இரனமடு, அநுராதபுரம், சீகிரியா ஆகிய பகுதிகளில் உள்நாட்டு விமான நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், கண்டி, நுவரெலியா மற்றும் இரனமடு ஆகிய உள்நாட்டு விமான நிலையங்களை அடுத்த வருடத்தில் அமைக்க 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
புதிய வாகனக் கொள்வனவு பதிவு வரி நீக்கப்பட்டுள்ளதாகவும் சொகுசு வாகனங்கள் இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் லொறி மற்றும் பஸ்களுக்கான பதிவு வரி அமுலில் இருக்கும் எனவும், சுற்றுலா துறைக்கென இறக்குமதி செய்யப்படும் பஸ்களுக்கான வெட் வரி நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
48 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் அறவிடப்பட மாட்டாதென ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் யாழ். துறையப்பா, கிளிநொச்சி விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றை அடுத்த வருடத்தில் அபிவிருத்தி செய்ய 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டில் வளர்ந்துவரும் சுகாதார சேவையை மேம்படுத்த 2012 வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.
பரீட்சையில் சித்தியடையாவிட்டால் வாழ்க்கையிலும் சித்திபெற முடியாது என கருத வேண்டாம். சாதாரண தர உயர்மதர பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழகம் செல்ல முடியாத மாணவர்கள் தொழிற்பயிற்சி கல்லூரிகளில் அடுத்த வருடம் முதல் இணைத்துக் கொள்ளப்படுவர் என ஜனாதிபதி தெரிவித்தார்.