Published On: Wednesday, February 29, 2012
பொத்துவில் பஸ் டிப்போவின் அவலநிலை; பிரயாணிகள் கவலை

(சம்யா)
இலங்கைப் போக்குவரத்து சபையின் பொத்துவில் பஸ் டிப்போ பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக அதன் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து சம்பளமின்றி வேலை செய்வதாகக் கூறுகின்றனர் அதன் ஊழியர்கள். மேலும், பொத்துவில் பஸ் டிப்போ கடந்த அரசின் காலத்தில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்பின் வேண்டுகோளுக்கிணங்க அக்கரைப்பற்றின் உப டிப்போவாக திறக்கப்பட்டு சுமார் பத்தாண்டுகள் கழிந்துள்ள நிலையில் 6 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன.
தற்போது இரண்டு பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பழுதடைந்து காணப்படும் பஸ்வண்டிகள் திருப்படாமல் கட்டையில் காணப்படும் இந்த பஸ் டிப்போவின் அவல நிலை குறித்து உயர் அதிகாரிகள் அசமந்த போக்குடன் காணப்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் பிரயாணிகள் கவலை தெரிவிக்கின்றனர். பொத்துவிலிருந்து அக்கரைப்பற்று, பாணமை, மொனராகல, கொழும்பு போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் பயணிகள் பஸ் இன்றி தனியார் பஸ்வண்டிகளில் அதிக பணம் கொடுத்து பயணிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் இரவு நேரங்களில் அக்கரைப்பற்று - பொத்துவில் பாதையில் பஸ்சேவையும் இல்லாத நிலை காணப்படுகிறது. பொத்துவில் பிரதேசத்தில் அதிகளவு வெளிப்பிரதேச ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் சேவையாற்றி வருகின்றனர். அவர்களின் போக்குவரத்துக்கு போதியளவு அரச பஸ்வண்டிகளின்றி பல்வேறு சிரமங்களுடன் தனியார் பஸ்களில் பயணிக்க வேண்டியுள்ளது. மாலை 4.30க்குப் பின்னர் பொத்துவில் அக்கரைப்பற்று பாதையில் பஸ் இன்றி பொதுமக்கள் அதிகளவு கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
மகிந்த சிந்தனையின் கீழ் நாட்டிலுள்ள அரச போக்குவரத்து சேவை, அதிவேகப் பாதைகள் நாடுமுழுவதும் நவீன மயப்படுத்தி வருகின்ற இக்கால கட்டங்களில் இலங்கைப் போக்குவரத்துக்குச் சொந்தமான பொத்துவில் பஸ் டிப்போவை யாரும் கவனிப்பாரற்றுக் காணப்படுவதானது மிகுந்த கவலையை அளிப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். பொத்துவில் பிரதேசம் நாட்டின் உல்லாசப் பிரயாணிகளை கவருகின்ற பிரதேசமாகும். அத்துடன் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் அதிகளவு வந்து செல்கின்ற மிகவும் பிரசித்தி பெற்ற நகரமுமாகும். அத்துடன் உகந்தை முருகன் ஆலயம், குமண பறவைகள் சரணாலயம், உல்லை, குடாக்கல்லு, அறுகம்ப போன்ற இடங்கள் சுற்றுலா மையங்களாக காணப்படுகின்ற பிரதேசங்களுக்கு மத்திய தளமாக பொத்துவில் நகரம் காணப்படுகிறது.
இலங்கைத் தீவின் தென்கிழக்குப் பிரதேசத்தின் ஒரு ஓரமாகக் காணப்படும் பொத்துவில் நகரம் பல்வேறு அபிவிருத்திகளைக் கண்டுவரும் இக்காலை வேளையில் அங்கு வருகின்ற மற்றும் அங்கிருந்து செல்கின்ற பலதரப்பட்ட மக்களின் பிரயாணத்திற்கு பொத்துவில் பஸ்டிப்போ மிகவும் பயனுடைய பிரயாண வசதிகளை செய்ய வேண்டிய கடப்பாடு காணப்பட்ட போதிலும் போதியளவு பஸ் வண்டிகள் இன்மையானது கவலை தருவதாக அங்கு கடமையாற்றும் ஊழியர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.
அரசியல்வாதிகளாலும், உயர் அதிகாரிகளாலும் பின்தள்ளப்பட்டுள்ள நிலையில் காணப்படும் பொத்துவில் பஸ்டிப்போவின் தரத்தை அதிகரித்து, அதிகளவு புதிய பஸ்வண்டிகளையும் தந்துதவுதற்கு பிரதேச அரசியல் வாதிகளும், அமைச்சர்களும் ஆவண செய்வதுடன், போக்குவரத்து அமைச்சரும் இப்பிராந்திய போக்கு வரத்துச் சேவையில் அதிக கவனமெடுத்து அபிவிருத்தி செய்யுமாறு பயணிகள் உருக்கமான வேண்டுகோளை விடுக்கின்றனர்.

