Published On: Thursday, March 01, 2012
ஒரு கோடி கேட்டு கடத்தப்பட்ட மாணவன் மீட்பு

(இந்தியாவிலிருந்த சாஹுல் ஹமீது)
சென்னையில் வங்கிகளில் கொள்ளையடித்த வட மாநில கும்பல் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ரூ.1 கோடி கேட்டு மாணவனை கடத்திய வட மாநில கும்பலை போலீஸ் சுற்றி வளைத்து அதிரடி நடவடிக்கை எடுத்து மாணவனை மீட்டது. வியாசர்பாடி எம்.கே.பி.நகர் 12ஆவது மேற்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். பெருங்குடியில் இரும்பு பொருட்கள் மொத்த விற்பனை கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு ஆனந்தராஜ் (வயது 21), யுவராஜ் (வயது 17), என்ற மகன்களும், திவ்யா (வயது 15), ஷீலா (வயது 11) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
இவர்களில் யுவராஜ் பிராட்வே முத்தியால் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவன் யுவராஜ் தனது நண்பன் வீட்டில் நடைபெறும் காதுகுத்து விழாவில் பங்கேற்க செல்வதாக கூறி விட்டுச் சென்றார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. காலையில் வந்து விடுவான் என்று பெற்றோர் இருந்தனர். ஆனால் மறு நாளும் வராததால் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடினார்கள். 2 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து நேற்று இரவு மாணவன் யுவராஜின் தந்தை கிருஷ்ணன், எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் கோவி.மனோகரனிடம் புகார் செய்தார். அவர் தனிப்படை அமைத்து போலீசாரை உஷார் படுத்தினார்.
இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் சென்று பல இடங்களில் விசாரணை நடத்தினர். மிரட்டல் போன் இந்த நிலையில் நேற்று இரவு 8.36 மணிக்கு மாணவனின் தந்தை செல்போனுக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது. அதில் பேசியவன் உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்து இருக்கிறோம். ரூ.1 கோடி கொடுத்தால் விட்டு விடுகிறோம். இல்லையெனில் காலையில் உன் வீட்டின் முன் மகன் யுவராஜ் பிணமாக கிடப்பான் என்று மிரட்டி விட்டு போனை வைத்து விட்டான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் மீண்டும் உதவி கமிஷனர் கோவி.மனோகரனை சந்தித்து மிரட்டல் போன் விவரத்தை தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் கோவி. மனோகரன் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவராஜ், மகேந்திரன், ஜெயராமன், கணேசன், பஷீர் ஆகியோர் செல்போன் தகவலை வைத்து கடத்தல் கும்பலை பிடிக்க திட்டமிட்டனர். அப்போது கொடுங்கையூர் எவரடி காலனியில் இருந்து மர்ம போன் வந்து இருப்பதையும், அது ராகவன் என்பவரது மகன் விஜயகுமாரின் செல்போன் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் இரவோடு இரவாக வீட்டை கண்டு பிடித்து விட்டனர். இன்று அதிகாலை 2.30 மணிக்கு போலீஸ்படை அந்த வீட்டை முற்றுகையிட்டு அதிரடியாக உள்ளே புகுந்தது. அங்கு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த மாணவன் யுவராஜை போலீசார் மீட்டனர். பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவனை விஜயகுமாரும், அவரது நண்பர்கள் அஸ்லம் கான், அன்வர்கான் ஆகி யோரும் சேர்ந்து கடத்தியது தெரிய வந்தது. உ.பி.சகோதரர்கள் 3 பேரையும் கைது செய்து பெரவள்ளூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
கைதான விஜயகுமார் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஆவார். அஸ்லம்கான், அன்வர் கான் இருவரும் அண்ணன் -தம்பிகள், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 10 ஆண்டுகளாக சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் தனியாக தங்கியுள்ளனர்.
அஸ்லம்கான் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அன்வர் கான் ஒரு கல்லூரியில் படிக்கிறார். இவர்களிடம் இருந்து கள்ளத்துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாணவன் யுவராஜ் எப்போதும் கைநிறைய பணம் வைத்திருப்பார். நண்பர்களுக்கும், செலவு செய்வார். அதை நோட்டமிட்ட வட மாநில கும்பல் அவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து பணம் பறிப்பதற்காக இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
ஜெயிலில் தந்தை பிடிபட்ட வடமாநில வாலிபர்கள் துப்பாக்கியும் வைத்து இருந்தனர். உ.பி.யில் இருந்து அதை கடத்தி வந்திருப்பதால் இவர்கள் சென்னையில் இதற்கு முன் வேறு ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா? என்று விசாரணை நடக்கிறது. வட மாநில வாலிபர்களின் தந்தை அகமது கான் இவர் மீது உ.பி.யில் 5க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன. இதில் தண்டனை பெற்று உ.பி.யில் ஜெயிலில் இருக்கிறார். அவருக்கும் இதில் தொடர்பு உண்டா என்றும் போலீசார் விசாரிக்கிறார்கள். மீட்கப்பட்ட மாணவனிடம் போலீசார் தனியாக வைத்து கடத்தல் கும்பலை ஏற்கனவே தெரியுமா? அவர்கள் நண்பர்களா?, எங்காவது பார்த்தது உண்டா? என்ன சொல்லி கடத்தினார்கள்? என்பன போன்ற விவரங்களை கேட்டு வருகிறார்கள்.
விசாரணைக்குப் பின் மாணவன் யுவராஜ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறான். மாணவன் பத்திரமாக மீட்கப்பட்ட தகவல் கிடைத்ததும் போலீஸ் கமிஷனர் திரிபாதி தனிப்படை போலீசாரை பாராட்டினார்.

